| போந்து அவண் இருப்பின், எம்மைப் போற்றவே பொழுது போமால்; தேர்ந்து, இனிது இயற்றும் உன்தன் அரசியல் தருமம் தீர்தி. |
ஏந்தலும் - பெருமையில் சிறந்த இராமனும்;இதனைக் கேளா - (சுக்கிரீவன் கூறிய) இவ்வுரையைக் கேட்டு;இன்இள முறுவல் நாற -இனிய புன்னகை தோன்ற;வேந்து அமை இருக்கை -அரசர்க்குரிய அரண்மனையில் தங்கியிருக்கும்;எம்போல் விரதியர் -எம்மைப் போல் விரதம் பூண்டோர்;விழைதற்கு ஒவ்வா -விரும்பியிருத்தற்குத் தகாததாகும்; அவண் போந்து இருப்பின் -(மேலும்) அவ்விடத்தில் (கிட்கிந்தா நகரத்தினுள்) வந்து வசித்தால்;எம்மைப் போற்றவே பொழுது போம் - எம்மை உபசரிப்பதிலேயே (உனக்குப்) பொழுது கழிந்திடும்;தேர்ந்து இனிது இயற்றும் -ஆராய்ந்து இனிது நடத்தும்;உன்தன் அர சியல் தருமம் - உன் அரசாட்சியின் முறைமையினின்றும்;தீர்தி -தவறியவனாவாய். விரதியர் - தவ வாழ்வினர். 'தாழிரும் சடைகள் தாங்கித் தாங்க அரும் தவம் மேற்கொண்டு' கானகத்தில் வாழவேண்டும் என்பது கைகேயி சொன்ன (1601); அது பழுதாகாமல் தவ வாழ்வினராக இருந்தனர் இராமனும் இளவலும். முறுவல் - அன்பு பற்றி எழுந்தது. கேளா - செய்யா என்னும் வாய்பாட்டு வினையெச்சம் உடன்பாட்டுப் பொருளில் வந்தது. நாற - தோன்ற; 20 4135. | 'ஏழ் - இரண்டு ஆண்டு, யான் போந்து எரி வனத்து இருக்க ஏன்றேன்; வாழியாய்! அரசர் வைகும் வள நகர் வைகல் ஒல்லேன்; பாழி அம் தடந் தோள் வீர! பார்த்திலைபோலும் அன்றே! யாழ் இசை மொழியோடு அன்றி, யான் உறும் இன்பம் என்னோ? |
வாழியாய் -வாழ்வை உடையவனே!ஏழ் இரண்டு ஆண்டு - பதினான்கு வருட காலம்;யான் போந்து எரி வனத்து இருக்க -நான் சென்று வெம்மை மிக்க காட்டில் வசிப்பதாக;ஏன்றேன் -ஏற்றுக் கொண்டேன்;அரசர் வைகும் வளநகர் -அரசர்கள் வாழும் செல்வ வளம் வாய்ந்த நகரில்;வைகல் ஒல்லேன் -தங்குவதற்கு உடன்படேன். பாழி அம் தடந்தோள் வீர -(மேலும்) வலிமை வாய்ந்த அழகிய பெரிய புயங்களை உடைய வீரனே!யாழ் இசை மொழியோடு அன்றி -யாழின் இசைபோலும் சொல்லையுடைய சீதையோடு அல்லாமல்;யான் உறும் இன்பம் என்னோ -நான் அடையும் இன்பம் யாதோ? |