பக்கம் எண் :

336கிட்கிந்தா காண்டம்

     மேகங்கள் -மேகங்கள் (பாறைகளின் மேல் மழைத் தாரை பொழிவது);
மள்ளர்கள் -
வீரர்கள்;மறுபடை மான யானைமேல் -பகைவர்
படையிலுள்ள பெருமை வாய்ந்த யானைகளின் மேல்;வெள்ளி வேல்
எறிவன போன்ற
- வெண்ணிறமான வேல்கள் எறிவதைப் போன்றிருந்தன.
தள்ள அரும்  துளிபட -
விலக்க முடியாத அரிய நீர்த் தாரைகள்
விசையுடன் விழுவதால்;தகர்ந்து சாய் கிரி -சிதைந்து சாய்கின்ற மலைகள்;
புள்ளி வெங்கட கிரி -
புள்ளிகளையுடைய கொடிய மத யானைகள்;புரள்வ
போன்ற -
(அவ்வேல்கள் படுவதால்) புரண்டு விழுவன போன்றன.

     மள்ளர்கள் மேகங்களுக்கும், யானைகள் மலைகளுக்கும் வேல்கள்
மழைத்தாரைகட்கும் உவமை. 'குன்றத் தன்ன தோர் பெருங்களிறு'' (புறநா.140)
என்பதும் புறம்.  யானையின் மத்தகத்துப் புள்ளிகள் இருத்தல் நல்லிலக்கணம்
ஆதலின் 'புள்ளி வெங்கடகிரி' என்றார்.  யானைகள் மீது வேல் எய்தல்
பண்டைப் போர் முறையாகும்.  'யானை பிழைத்த வேல்' (குறள் 772)
'கைவேல் களிற்றொடு போக்கி வருபவன்' (குறள் 774) 'விழித்து மேல் சென்ற
வேழம் வேலினால் விலக்கி நிற்பார்' (சீவக. 783) என்று வருவனகாண்க.  17

4165.வான் இடு தனு, நெடுங்
      கருப்பு வில்; மழை,
மீன் நெடுங் கொடியவன்;
      பகழி, வீழ் துளி;
தான் நெடுஞ் சார்
      துணை பிரிந்த தன்மையர்
ஊனுடை உடம்பு எலாம்
      உக்கது ஒத்ததே.

     மழை -மேகம்;மீன் நெடுங்கொடியவன் -மீனின் வடிவம்
எழுதப்பெற்ற உயர்ந்த கொடியை உடைய மன்மதனாக;வான் இடுதனு -
அம்மேகத்தில் தோன்றிய இந்திர வில்;நெடும் கருப்பு வில் -நீண்ட கரும்பு
வில்லாக;வீழ் துளி -(மேகத்தினின்று) விழுகின்ற மழைத்தாரைகள்;பகழி -
(மன்மதன் தொடுக்கும்) அம்புகளாக;நெடுஞ்சார் -நீண்ட மலைச் சாரல்கள்;
துணை பிரிந்த தன்மையர் -
தத்தம் துணைவர்களைப் பிரிந்த
இயல்புடையவராக;ஊன் உடை உடம்பு எலாம் -(மழைத் தாரைகள் மலைச்
சாரல்களைத் துளைத்தல் பிரிந்தாரின்) தசையுடன் கூடிய உடல்கள்
முழுவதையும்;உக்கது ஒத்தது -ஊடுருவியது போன்றது.

     மழையை மன்மதனாகவும் இந்திர வில்லைக் கரும்பு வில்லாகவும்,
வீழ்துளியைப் பகழியாகவும், நெடும் மலைச் சாரலைத் துணை பிரிந்த
தன்மையராகவும் பல பொருள்களைத் தம்முள் இயைபு உடையனவாக வைத்து
உருவகம் செய்ததால் இயைபு உருவக அணியாகும்.  இந்திரவில்லைத்
தன்னிடம் கொண்ட மேகம், வில்லிலிருந்து செலுத்தும் பகழி போல், மழைத்
தாரைகளை மலைகளில் பொழிவது துணை பிரிந்தாருடைய உடம்பில் காமன்
அம்புகள் ஊடுருவது