முதலான தெளிந்த அறிவுடையோர்களெல்லாரும்;ஞான நாயகன் -ஞான நாயகனாக விளங்கும் இராமன்;நவை உற -(சீதையைப் பிரிந்து) துன்பம் அடைய;நோக்கினர் நல்க -(அதைப் போக்குவான் வேண்டி) சீதையைத் தேடித்தர (எண்ணி);கானம் யாவையும் பரப்பிய -காடுகளில் எல்லாம் பரப்பிய;கண் என - கண்கள் போலத் தோன்ற;மஞ்ஞை -மயில்கள் (தோகைக்கண்களைப் பரப்பி);சனகன் மானை -சனகன் மகளான மான் போன்ற பார்வையையுடைய சீதையை;நாடி நின்று -தேடி நின்று; அழைப்பன போன்றன -அழைப்பனவற்றை ஒத்தன. மலர்த்திசை முகன் - திருமாலின் நாபிக்கமலத்தில் எழுந்த நான்முகன் என்றும் உரைக்கலாம். காலமிடையிட்டவற்றையும் தேயமிடையிட்டவற்றையும் அறிய வல்லராதலின் 'தெளிந்தோர்' என்றார். துன்புறும் இராமன் சீதையைத் தேடிக் காணுவதற்கு உதவ விரும்பி நான்முகன் முதலியோர் எங்கணும் கண்களைப் பரப்பி வைத்தது போலக் கானகம் எங்கணும் மயில்(தோகைக்) கண்கள் அமைந்தனவாம். கார்காலத்தில் மயில்கள் தோகை விரித்தாடுதலும், அகவுதலும் இயற்கை. மயில்கள் தமது தோகைக் கண்கள் கொண்டு இராமனுக்கு உதவச் சீதையைத் தேடுவது போலவும், குரல் கொண்டு கூவி அழைப்பது போலவும் நின்றன என்றது தற்குறிப்பேற்ற அணியாகும். 'தேடா நின்ற என்னுயிரைத் தெரியக் கண்டாய். சிந்தையுவந்து, ஆடா நின்றாய்; ஆயிரம் கண்ணுடையாய்க்கு ஒளிக்குமாறு உண்டோ?'' (3734) என இராமன் மயிலை நோக்கிக் கூறியது இங்கு நினையத்தகும். 44 செந்தாமரை மலர்களும் கொடிகளும் | 4192. | செஞ் செவ் வேலவர், செறி சிலைக் குரிசிலர், இருண்ட குஞ்சி சேயொளி கதுவுறப் புது நிறம் கொடுக்கும் பஞ்சி போர்த்த மெல் அடி எனப் பொலிந்தன, பதுமம்; வஞ்சி போலியர் மருங்கு என நுடங்கின, வல்லி. |
செஞ் செவ் வேலவர் -செக்கச் சிவந்த வேலையுடையவரும்;செறி சிலைக் குரிசிலர் -கட்டமைந்த வில்லை ஏந்தியவருமான தலைவர்களின்; இருண்ட குஞ்சி -கருநிறமான தலைமுடி;சேயொளி கதுவுற -சிவந்த ஒளியைப் பற்றிக் கொள்ளுமாறு;புதுநிறம் கொடுக்கும் -(அதற்குப்) புதிய நிறத்தைக் கொடுக்கும்;பஞ்சி போர்த்த மெல்லடி என -செம்பஞ்சுக் குழம்பு மிகுதியாக பூசப்பெற்ற மென்மையான (மகளிரின்) பாதங்கள் போல; புதுமம் பொலிந்தன -தாமரை மலர்கள் விளங்கின. வஞ்சி போலியர் மருங்க என -வஞ்சிக் கொடி போன்ற வடிவுடைய அம்மகளிரின் இடை போன்றது;வல்லி நுடங்கின -பூங்கொடிகள் அசைந்தன. |