பக்கம் எண் :

கார்காலப் படலம் 395

வேண்டுவது அன்று -(ஆதலால் சீதையைத் தேடும்) இம்முயற்சி
வேண்டுவதன்று;நோய்தெற மாண்டனன் -''(சீதையைப் பிரிந்ததால்
ஏற்பட்ட) நோய் அழிக்க இராமன் இறந்துபட்டான்'';என்றது -எனப்படுவது;
மாட்சிப் பாலது ஆம் -
பெருமை தருவதாகும்.

     சீதையைக் கவர்ந்து சென்ற அரக்கர் இருப்பிடத்தைக் கண்டுபிடிக்கவே
நெடுங்காலம் செல்லும்.  கண்டுபிடித்த பின்னர் அப்பகைவர்களோடு
போரிட்டுச் சீதையை மீட்கவும் நெடுங்காலம் ஆகும்.  எனவே,
இம்முயற்சிகளில் ஈடுபடாமல் 'பிரிவுத்துயரால் இராமன் இறந்தான்' எனப்
பேசுவதே சிறந்தது, என இராமன் எண்ணினான்.  துன்பங்களோடு
வாழ்வதினும் துன்பம் நீங்க உயிர் போதலே பெருமை தரத்தக்கது என்பதால்
'மாட்சிப் பாலது'  என்றான்.  காலம் என்றது காலத்தின் பெரும் பகுதியைக்
குறித்தது.                                                     90

4238.'செப்பு உருக்கு அனைய
     இம் மாரிச் சீகரம்
வெப்புறப் புரம் சுட,
      வெந்து வீவதோ -
அப்பு உருக் கொண்ட வாள்
      நெடுங் கண் ஆயிழை
துப்பு உருக் குமுத வாய்
      அமுதம் துய்த்த யான்?

     அப்பு உருக் கொண்ட -அம்பின் கூரிய வடிவத்தைக் கொண்ட;வாள்
நெடுங்கண் -
ஒளி பொருந்திய நீண்ட கண்களை உடைய;ஆயிழை -
ஆராய்ந்தெடுத்த அணிகலன்களை அணிந்த சீதையின்;துப்பு உருக்
குமுதவாய் -
பவளம் ஒத்த நிறமுடையதும், ஆம்பல் மலர் போன்றதுமான
வாயிதழின்;அமுதம் துய்த்த யான் -அமுதத்தைப் பருகி இன்புற்ற நான்;
இம் மாரிச் சீகரம் -
இந்த மழைத் துளிகள்;செப்பு உருக்கு அனைய -
செம்பை நெருப்பிலிட்டு உருக்கி, அதனை ஊற்றினாற்போன்ற;வெப்பு உற -
வெம்மை மிகுமாறு;புரம்சுட -என் உடம்பை எரிக்க;வெந்து வீவதோ -
வெந்து அழிவது தகுமோ?

     சீதையுடன் இருந்த காலத்தில் பெருமகிழ்வு எய்தியவன், பிரிவுற்ற
காலத்தில் மழைத்துளிகள் தன்னை வருதத அழிய வேண்டியதுதான என
வருந்திக் கூறினான்.  அமுதம் உண்டவர் இறத்தல் இல்லையாதலின் சீதையின்
குமுதவாய் அமுதம் துய்த்த தான் வீவது பொருந்துமோ என இரங்கினான்.

     செம்பு, அம்பு என்பன வலித்தல் விகாரங்கள். கண்களின் நீட்சிக்கும்
கூர்மைக்கும் அம்பு உவமை ஆயிழை; அன்மொழித்தொகை; துப்பு, வாயின்
நிறத்திற்கும் குமுதம் வடிவிற்கும் உவமைகளாகும்.  'அப்புருக் கொண்ட
வாள்நெடுங் கண், என்பதில் சீதையின் இயற்கை அழகும், ஆயிழை என்பதில்
அணிகலன்களால் பெற்ற செயற்கை அழகும் உணர்த்தப்பட்டன.  தண்மையை
அளிக்கும் மழைத்துளி பிரிந்தார்க்கு வெப்பம் உண்டாக்குதல் எண்ணிப்
பார்த்தற்குரியது.                                                 91