திருமால் தன் ஆணைக்கு அடங்கி நடக்கும் பாற்கடலிடத்து எளிதில் அமிழ்தத்தைப் பெறலாம்; எனினும் அங்ஙனம் பெறாது. மத்து முதலிய கருவிகளைக் கொண்டு தன் கையால் கடைந்தே அமிழ்தத்தைப் பெற்றான். அதுபோன்றே இராமன் நினைத்தால் வேறொருவர் துணையின்றியே உலகையும் உயிர்களையும் அழித்துப் பிராட்டியைக் காணும் ஆற்றல் பெற்றவன்; எனினும் வானரப்படைகளின் துணை கொண்டு தேடி முயன்று பகைவரை வென்று சீதையைக் காண்பதே முறையானது என்று இலக்குவன் உரைத்தான். இச்செய்யுள் பிறிது மொழிதலணி. திருமால் பாற்கடல் கடைந்ததை ''வடவரையை மத்தாக்கி வாசுகியை நாணாக்கிக் கடல் வண்ணன் பண்டொருநாள் கடல்வயிறு கலக்கினையே' (சிலப் - ஆய்ச்சி.32) என்ற அடிகளும் உணர்த்தும். 'பூவிற்குத் தாமரையே' (திருவள்ளுவ மாலை. 38) 'பூவினிற் கருங்கலம் பொங்கு தாமரை' (தேவா. 1182. 2) என்றாராகலின் மலர் இங்கே தாமரையைக் குறித்து நின்றது. அ - பண்டறிசுட்டு. தேவரும் அரக்கரும் பல காலம் கடைந்த கடலாதலின் 'திண்கடல்' எனப்பட்டது. வரை முதல் கலப்பைகள் - மந்தரமலை, வாசுகி, மேரு முதலியன. செங்கணான் - சிவந்த வரிகள் படர்ந்த கண்களை உடையவன். இங்கே திருமாலைக் குறித்தது. 'கண்ணும் திருவடியும் கையும் திருவாயும் செய்ய கரியவனை' என்கிறது சிலப்பதிகாரம் (ஆய்ச்சி. 36) குரைத்தல் - ஒலித்தல் - கடகம், வாகுவலயம் போன்ற அணிகள் ஒலிக்கப்பெறல்; வருந்திக் கடைதற்குப் பொருந்தாத மென்மையான கை என்பதை மலர்க்கை' என்ற தொடர் உணர்த்திற்கு. எத்துணை ஆற்றலுடையராயினும் ஒரு செயலைத் திறம்படப் புரியக் காலமும் கருவியும் இன்றியமையாதன என்பது இப்பாடலில் உணர்த்தப்பட்டது. 'ஞாலம் கருதினும் கைகூடும், காலம் கருதி இடத்தால் செயின்' (குறள் - 484) என்றதுகாண்க. 97 | 4245. | 'மனத்தினின் உலகு எலாம் வகுத்து, வாய்ப் பெயும் நினைப்பினன் ஆயினும், நேமியோன் நெடும் எனைப் பல படைக்கலம் ஏந்தி, யாரையும், வினைப் பெருஞ் சூழ்ச்சியின் பொருது வெல்லுமால். |
நேமியோன் -(மற்றும்) அத்திருமால்;மனத்தினின் -திருவுள் ளத்தில் நினைத்த மாத்திரத்தில்;உலகு எலாம் வகுத்து -உலகங்களை எல்லாம் படைத்து; வாய்ப் பெயும் -வாயில் போட்டு உண்ணத்தக்க;நினைப்பினன் ஆயினும் -சங்கற்ப வலிமை உடையவனாயினும்;எனைப்பல நெடும் படைக்கலம் ஏந்தி -(அங்ஙனம் செய்யாமல்) வேறு பல பெரிய ஆயுதங்களைக் கையிற் கொண்டு;யாரையும் -(கொடிய வர்கள்) அனைவரையும்;வினைப் பெரும் சூழ்ச்சியின் -போர்த் தொழிலுக்குரிய சூழ்ச்சிகளோடு;பொருது வெல்லும் -போர் செய்தே வெற்றி கொள்வான். தான் பரமபதத்தில் அல்லது பாற்கடலில் இருந்தவாறே தன் மனத்தால் நினைத்த அளவில் சங்கற்ப மாத்திரையில் - அனைவரையும் அழிக்கவல்லவனாயினும், திருமால் அங்ஙனம் செய்யாது பல படைக்கருவிகளைக் கொண்டு |