அங்கதன் அனுமனுடன் தாரையின் கோயிலை அடைதல் 4295. | மந்திரத் தனி மாருதி தன்னொடும், வெந் திறல் படை வீரர் விராய் வர, அந்தரத்தின் வந்து, அன்னைதன் கோயிலை, இந்திரற்கு மகன் மகன் எய்தினான். |
இந்திரற்கு மகன் மகன் -இந்திரன் மைந்தனான வாலியின் மகனாகிய அங்கதன்;மந்திரத் தனி மாருதி தன்னொடும் -ஆலோசனை யில் வல்ல ஒப்பற்ற வாயு மகனான அனுமனோடு;வெந்திறல் படை வீரர் -மிக்க வலிமையுள்ள வீரர்கள்;விராய் வர -திரண்டு (தன்னுடன்) வர;அந்தரத்தின் வந்து -(சுக்கிரீவனது அரண்மனையிலிருந்து) வெளிப்போந்து;அன்னைதன் கோயிலை -(தன்) தாயான தாரையின் மாளிகையை;எய்தினான் - அடைந்தான். இந்திரற்கு மகன் மகன் -இந்திரனுக்குப் பேரன்; அங்கதன் அந்தரத்தின் வந்து - மனக் கலக்கத்தோடு வந்து; வான் வழியாகத் தாவி வந்து - என்றும் உரைக்கலாம். அந்தரம்: வெளிப்புறம், மனக்கலக்கம். 27 தாரையின் பேச்சு 4296. | எய்தி, 'மேல் செயத்தக்கது என்?' என்றலும், 'செய்திர், செய்தற்கு அரு நெடுந் தீயன; நொய்தில் அன்னவை நீக்கவும் நோக்குதிர்; உய்திர் போலும், உதவி கொன்றீர்?' எனா, |
எய்தி -(அங்கதன் தாரையை அடைந்து);மேல் செயத் தக்கது என் - இனி நாம் செய்யத்தக்க செயல் என்ன;என்றலும் -என்று அவளை வினாவிய அளவில்;செய்தற்கு அரு -(அவள் அவ்வானரர்களை நோக்கி) செய்யத் தகாத;நெடுந்தீயன -பெரிய தீச் செயல்களை;நொய்தில் செய்திர் -எளிதிலே செய்துவிட்டீர்கள்;அன்னவை நீக்கவும் -அச் செயல்களால் வரும் கேடுகளை எளிதில் நீக்கிக் கொள்ளவும்;நோக்குதிர் -வழி தேடுகிறீர்கள்;உதவி கொன்றீர் -செய்ந்நன்றி மறந்தவர்களான நீங்கள்; உய்திர் போலும் -தப்பி வாழ்வீர்கள் போலும்!எனா - என்று சொல்லி. . . விளம்புகின்றாள் என அடுத்த கவியோடு முடியும். 'உய்வில்லை செய்ந்நன்றி கொன்ற மகற்கு' (குறள் 110), உய்ய மாட்டீர் என்பது வலியுறுத்தப்பட்டது. நெடுந்தீயன - மிக்க கொடியன. நோக்குதல் - வழிதேடுதல், ஆலோசித்தல், 'செய்தி கொன்றோர்க் குய்தி யில்லென் றறம் பாடிற்றே' என்ற பழம் பாடல் கருத்தினை நினைவு கூர்க. (புறம் 34) 28 4297. | மீட்டும் ஒன்று விளம்புகின்றாள்: ' ''படை |
|