பக்கம் எண் :

கிட்கிந்தைப் படலம் 445

 பொங்கு வெம் முலைகள், பூகக்
      கழுத்தோடு மறையப் போர்த்த
நங்கையைக் கண்ட வள்ளல்,
      நயனங்கள் பனிப்ப நைந்தான். *

     மங்கல அணியை நீக்கி -தாலியை அணியாமல் விடுத்து;மணி அணி
துறந்து -
இரத்தின மணிகள் போன்ற மற்றைய அணிகலன் களையும்
நீக்கிவிட்டு;வாசக் கொங்கு அலர் -மணமிக்க தேன் பெருகுகின்ற
மலர்களின்;கோதை மாற்றி -மாலை சூடுவதையும் விட்டு;குங்குமம்
சாந்தம் கொட்டா -
குங்குமப் பூவின் குழம்பையும், சந்தனக் கலவையையும்
பூசாத;பொங்கு வெம் முலைகள் -பருத்துள்ள வெம்மையான முலைகள்;
பூகக்  கழுத்தோடு மறையப்போர்த்து -
பாக்குமரம் போன்ற கழுத்துடன்
மறையும்படி (மேலாடையால்) நன்றாகப் போர்த்துள்ள;நங்கையைக் கண்ட
வள்ளல் -
அத் தாரையைப் பார்த்த அருள்வள்ளலான இலக்குவன்;
நயனங்கள் பனிப்ப -
(தாரை யின் தோற்றம் கண்டதாலும், தன் தாயரை
நினைந்ததாலும்) தன் கண்களில் நீர் துளிக்க;நைந்தான் -வருந்தினான்.

     தாரையின் கைம்மைக் கோலம் இங்கு விளக்கப் பெறுகின்றது.
இலக்குவன் கண்ணீர் மல்கி நைந்துருகுவதற்குக் காரணம் தன்னுடைய தாயரும்
இப்படித்தானே கைம்மைக் கோலம் பூண்டிருப்பர் என்ற நினைவினால்.
மங்கலவணி. 'தாலி'; 'ஈகையரிய இழையணி மகளிர்' - புறம்.127           52

இலக்குவன் தாரையிடம் உரைத்தது

4321.'இனையர் ஆம், என்னை ஈன்ற
      இருவரும்' என்ன வந்த
நினைவினால் அயர்ப்புச் சென்ற
      நெஞ்சினன், நெடிது நின்றான்;
'வினவினாட்கு எதிர் ஓர் மாற்றம்
      விளம்பவும் வேண்டும்' என்று, அப்
புனை குழலாட்கு வந்த
      காரியம் புகல்வது ஆனான்;

     என்னை ஈன்ற இருவரும் -என்னைப் பெற்றெடுத்த தாய்மார்
இருவரும்;இனையர்  என்ன -இத்  தன்மையராகவே இருப்பார்கள் என்று;
வந்த நினைவினால் -
மனத்தில் தோன்றிய நினைவால்;அயர்ப்புச்
சென்ற-
வாட்டம் மிக்க;நெஞ்சினன் -மனத்தையுடைய வனாய்;நெடிது
நின்றான்-
நீண்ட நேரம் ஒன்றும் தோன்றாமல் அந்த இலக்குவன் திகைத்து
நின்றான்;வினவினாட்கு எதிர் -(தன்னிடம்) கேள்வி கேட்டவளுக்கு
மறுமொழியாக;ஓர் மாற்றம் விளம்பவும் வேண்டும் -ஒரு வார்த்தை
விடையாகச்சொல்லவும் வேண்டும்;என்று -என்று கருதி;அப் புனை
குழலாட்கு -
அழகிய கூந்தலையுடைய