கொண்டிருப்பது போலத் தம்பியாகக் கொண்டு;இங்க இத்துணை -இம் மலையில் இவ்வளவு (நாள்கள் வரையில்);நெடிது வைகி -நீண்ட காலம் தங்கி;தன்னைக் கொண்டிருந்தே -தன் உயிரை அரிதாகத் தாங்கி்க் கொண்டு;தாழ்த்தான் -பொறுத்திருந்தான்;அன்று எனின் - இல்லாவிட்டால்;தனு ஒன்றாலே -தன் வில்லொன்றால்;மின்னைக் கண்டனையாள் தன்னை -மின்னலைப் போன்ற உருவத்தைக் கொண்டவளான சீதையை;நாடுதல் -தேடுதல்;விலக்கற் பாற்றோ - (மற்றவரால்) தடுக்கக் கூடிய தன்மையுடையதோ? (யாராலும் தடுக்க முடியாது). உன்னைக் கண்டதும் உன்னிடம் அருள் உண்டாக உன்மூலமாக உன் அரசனாகிய சுக்கிரீவனிடம் நட்புக் கொண்டு, இடருற்றபோது அவன் உதவுவான் என்று கருதினான்; என்னிடம் மிக்க பாசம்கொண்டு என்னைப் பாவிப்பது போன்றே அவனையும் உடன் பிறந்தவனாகப் பாவித்து உங்கள் மூலமாக இச் செயலை எளிதில் முடித்துக் கொள்ளலாம் என்று கருதினான், இராமன். அதனால் இதுவரை பொறுத்திருந்தான்; அவன் இவ்வாறு பொறுத்திருந்தது உங்களுக்குப் பெருமையைத் தருவதற்கேயாம்; வல்லமையில்லாமையாலன்று. அவன் நினைந்திருந்தால் தன் வில்லொன்றால் பகைவரை வதைத்துச் சீதையை எளிதிலே மீட்டிருக்கமுடியும் என்று இலக்குவன் அனுமனிடம் கூறினான் என்பது. ஒளியினாலும் (கொடிபோல்) ஒல்கிடும் மென்மையாலும் சீதையை 'மின்னைக் கண்டனையாள்'என்றார். 72 | 4341. | 'ஒன்றுமோ, வானம்? அன்றி உலகமும் பதினால் உள்ள வென்றிமா கடலும் ஏழ் ஏழ் மலை உள்ள என்னவேயாய் நின்றது ஓர் அண்டத்துள்ளே எனின், அது நெடியது ஒன்றோ? அன்று நீர் சொன்ன மாற்றம் தாழ்வித்தல் தருமம் அன்றால். |
வானம் ஒன்றுமோ -ஆகாயம் ஒன்று மட்டுமோ?அன்றி -அது வல்லாமல்;பதினால் உள்ள உலகமும் -பதினான்காக உள்ளனவாகிய உலகங்களும்;வென்றி மாக்கடல் ஏழும் -வெற்றி பொருந்திய பெரிய ஏழு கடல்களும்;மலை ஏழும் -ஏழு மலைகளும்;உள்ள என்னவே ஆய் நின்றது -இருக்கின்றன என்று சொல்லுமாறு நிற்பதாகிய;ஓர்அண்டத் துள்ளே -ஓர் உலகமாகிய உருண்டைக்குள்ளே (ஏதாவதுஓரிடத்தில்); எனின் -சீதை இருக்கின்றாள் என்றால்;அது நெடிது ஒன்றோ- அந்த இடத்தைத் தேடிக் கண்டுபிடித்து மீட்டு வருவது (இராமனது வில்லுக்கு) பெரிய செயலாகுமோ?அன்று நீர் சொன்ன -(இருந்தாலும்) முன்பு நீங்கள் சொன்ன;மாற்றம் தாழ்வித்தல் -சொல்லை நிறைவேற்றாமல் தாமதம் செய்வது;தருமம் அன்று -(உங்களுக்குத்) தக்க செயல் (தருமம்) ஆகாது. |