அந் நிலை கண்ட -அவ்வாறு (இலக்குவனால் நேர்ந்த) நிலை மையைப் பார்த்த;திண்தோள் அரிக் குலத்து அனிகம் -வலிய தோள் களையுடைய வானர சேனை;எந் நிலை நின்றது என்கேன் -எந்த நிலைமையில் இருந்ததென்று சொல்வேன்? யாண்டுப் புக்கு -எந்த இடத்தில் புகுந்து;ஒளித்தது என்கேன் -பதுங்கியது என்று சொல்வேன்;இந் நிலை கண்ட அன்னை -(குரக்குச் சேனையின்) இத்தகைய நிலைமையை நேரிலே பார்த்த (என்) தாயான தாரை;ஏந்து இழை ஆயத்தோடு -சிறந்த அணிகளை அணிந்த மகளிர் கூட்டத்துடனே;மீன் நிலை வில்லினானை - மின்னல் போன்று ஒளிரும் வில்லைத் தாங்கிய இலக்குவனை;வழி எதிர் விலக்கி நின்றாள் -வழியிலே எதிரே சென்று வழி மறித்து நின்றாள். அம்மா - வியப்பிடைச்சொல். இலக்குவனது திருவடி பட்ட அளவில் வாயிற் கதவு முதலியன பொடியாய்விட்டதைக் கண்ட வானரங்கள் அஞ்சி, உயிர் தப்பிக் கலங்கிப் போனதிசை தெரியாமல் ஓடிப் போயின; அப்போது இலக்குவன் சினத்தோடு வர, அவனை மகளிர் கூட்டத்தோடு தாரை எதிர் கொண்டாள் என்பது. அனிகம் -சேனை; அனீகம் என்ற வடசொல்லின் திரிபு. மின் நிலைவில் - நிலைத்தல் என்றும் இல்லாத மின்னல் வில்லிடம் நிலைத்து நின்றது என்பது நயம். 84 | 4353. | 'மங்கையர் மேனி நோக்கான், மைந்தனும், மனத்து வந்து பொங்கிய சீற்றம் பற்றிப் புகல்கிலன்; பொருமி நின்றான்; நங்கையும், இனிது கூறி, ''நாயக! நடந்தது என்னோ, எங்கள்பால்?'' என்னச் சொன்னாள்; அண்ணலும் இனைய சொன்னான். |
மைந்தனும் -வீரனான இலக்குவனும்;மங்கையர் மேனி நோக்கான்- (இவ்வாறு வழியில் நின்ற தாரை முதலிய) பெண்களின் உரு வத்தை நிமிர்ந்தும் பாராதவனாய்;மனத்து வந்து பொங்கிய -தன் மனத்திலே எழுந்து பொங்கி நின்ற;சீற்றம் பற்றிப் புகல்கிலன் -சினத்தால் ஒன்றும் சொல்ல மாட்டாதவனாய்;பொருமி நின்றான் -விம்மி நின்றான்; நங்கையும்-பெண்களில் சிறந்தவளான (எனது தாயாகிய) தாரையும்;இனிது கூறி -(இலக்குவனது கோபம் தணியுமாறு) இனிய சொற்களைச் சொல்லி (அவனைப்பார்த்து);நாயக-'தலைவனே! எங்கள்பால் நடந்தது என்னோ- (நீஇராமனை விட்டுப் பிரிந்து) எங்களிடம் வந்தது எதற்காக?'என்னச் சொன்னாள் -என்று கேட்டாள்;அண்ணலும் -இளைவனான இலக்குவனும்; இனைய சொன்னான் -வந்த காரணத்தைக் கூறினான். மங்கையர் மேனி நோக்கான் - அயல் மாதரைக் கண்ணெடுத்துப் பாராத நோன்புடையவன் இலக்குவன் என்பது அறியப்படும். 85 |