4422. | கறங்கு போல்வன, காற்றினும் கூற்றினும் கடிய, பிறங்கு தெண் திரைக் கடல் புடைபெயர்ந்தெனப் பெயர்வ, மறம் கொள் வானரம் ஒன்பது கோடி எண் வகுத்த, திறம் கொள், வெஞ் சினப் படைகொடு, - குமுதனும் - சேர்ந்தான். |
குமுதனும் -குமுதன் என்னும் வீரனும்;கறங்கு போல்வன -காற்றாடி போல விரைந்து செல்வனவும்;காற்றினும் கூற்றினும் கடிய -காற்றைக் காட்டிலும் வேகம் உடையனவும், யமனைவிடக் கொடு மையுடையனவும்; பிறங்கு தெண்திரை -விளங்குகின்ற தெளிவான அலைகளையுடைய;கடல் புடை பெயர்ந்து எனப் பெயர்வ -கடல் இடம் விட்டு எழுந்தது போன்று செல்வனவும்;மறம் கொள் வானரம் -வீரம் கொண்ட வானரங்கள்;ஒன்பது கோடி எண் வகுத்த -ஒன்பது கோடியென்று கணக்கிடப்பட்டனவும்;திறம் கோள் வெம்சினப் படை கொடு -மனவலியும் உடல் வன்மையும் கடுமையான கோபமும் கொண்டனவுமான படைகளை உடன் கொண்டு; சேர்ந்தான் -வந்து சேர்ந்தான். கறங்கு - காற்றாடி; வானத்தில் சுழன்று செல்வதெனக் காரணக் குறியாயிற்று. கடிய - இரட்டுறமொழிதல்: காற்றினும் கூடிய கூற்றினும் கடிய என வேகத்தையும் கொடுமையையும் குறித்தவாறு. 16 4423. | ஏழின் ஏழு நூறாயிர கோடி என்று இசைந்த பாழி நல் நெடுந் தோள் கிளர் படை கொண்டு, பரவை ஊழி பேரினும் உலைவில, உலகினில் உயர்ந்த பூமி விண் புக, - பதுமுகன் என்பவன் - புகுந்தான். * |
ஊழி பரவை பேரினும் -உலக முடிவுக் காலத்தில் கடல் பொங்கி(த் தனது நிலையைவிட்டு)ப் பெயர்ந்து வந்தாலும்;உலைவு இல - அழிவற்றனவாகிய;ஏழின் ஏழு நூறு ஆயிர கோடி என்று இசைந்த - நாற்பத் தொன்பதினாயிரங் கோடி என்ற கணக்கோடு பொருந்திய;பாழி நல் நெடுந்தோள் -வலிமை மிக்க அழகிய நீண்ட தோள்களோடு விளங்குகின்ற; கிளர் படை கொண்டு -வானரப் படையை உடன் கொண்டு;உலகினில் உயர்ந்த பூமி -பூமியிலிருந்து மேலே எழுந்த |