வானர சேனைகளின் ஆற்றலும் சிறப்பும் 4429. | தோயின், ஆழி ஓர் ஏழும் நீர் சுவறி வெண் துகள் ஆம்; சாயின், அண்டமும் மேருவும் ஒருங்குடன் சாயும்; ஏயின், மண்டலமும் எள் இட இடம் இன்றி இரியும்; காயின் வெங் கனல்- கடவுளும் இரவியும் கரியும். |
தோயின் -(அங்கே திரண்ட வானர சேனைகள்) படிந்து முழுகினால்; ஆழி ஓர் ஏழும் -ஏழு கடல்களும்;நீர் சுவறி வெண்துகள் ஆம் -நீர் வற்றி வெள்ளை நிறப் புழுதியாக மாறி விடும்;சாயின் -ஒரு பக்கமாகச் சாய்ந்தால்;அண்டமும் மேருவும் -பூமி மண்டலமும் மேரு மலையும்; ஒருங்கு உடன் சாயும் -ஒரு சேர உடனே (அந்தப் பக்கமாகச்) சாய்ந்து விடும்;ஏயின் -எழுந்து உலாவினால்;மண்தலம் -இந்தப் பூமி;எள் இட இடமின்றி இரியும் -எள் இடுவதற்கும் இடம் இல்லாமற்போகும்;காயின் - சினம் கொள்ளுமாயின்;வெங்கனல் கடவுளும் -கொடிய அக்கினிதேவனும்; இரவியும் -சூரியனும்;கரியும் -வெந்து கருகிவிடும். இச் செய்யுள் வானர சேனையின் மிகுதியையும், பெரு வலிமையையும் குறிக்கிறது. இச் செய்யுள் அடிமறிமாற்றுப் பொருள்கோள் அமைப்புடையது. எந்த அடியை எங்கே கூட்டினும் பொருளும் ஓசையும் வேறுபடா. ஏயின் - எழுந்துஉலாவினால். 23 4430. | எண்ணின், நான்முகர் எழுபதினாயிரர்க்கு இயலா; உண்ணின் அண்டங்கள் ஓர் பிடி உண்ணவும் உதவா; கண்ணின் நோக்கறின், கண்ணுதலானுக்கும் கதுவா, - மண்ணின் மேல் வந்த வானர சேனையின் வரம்பே! |
மண்ணின்மேல் வந்த -பூமியின்மேல் ஒருங்கு திரண்டு வந்த;வானர சேனையின் வரம்பு -வானரப் படையின் அளவை;எண்ணின் -எண்ணத் தொடங்கினால்;நான்முகர் எழுபதினாயிரர்க்கு -எழு பதினாயிரம் பிரமர்களுக்கும்;இயலா - முடியாது;உண்ணின் -(இவ் வானர சேனைகள்) உண்ணத் தொடங்கினால்;அண்டங்கள் -அண்டங்களும் யாவும்;ஓர் பிடி உண்ணவும் உதவா -ஒவ்வொரு வானரமும் |