பக்கம் எண் :

512கிட்கிந்தா காண்டம்

வானர சேனைகளின் ஆற்றலும் சிறப்பும்

4429.தோயின், ஆழி ஓர் ஏழும் நீர்
      சுவறி வெண் துகள் ஆம்;
சாயின், அண்டமும் மேருவும்
      ஒருங்குடன் சாயும்;
ஏயின், மண்டலமும் எள் இட
      இடம் இன்றி இரியும்;
காயின் வெங் கனல்-
      கடவுளும் இரவியும் கரியும்.

     தோயின் -(அங்கே திரண்ட வானர சேனைகள்) படிந்து முழுகினால்;
ஆழி ஓர் ஏழும் -
ஏழு கடல்களும்;நீர் சுவறி வெண்துகள் ஆம் -நீர்
வற்றி வெள்ளை நிறப் புழுதியாக மாறி விடும்;சாயின் -ஒரு பக்கமாகச்
சாய்ந்தால்;அண்டமும் மேருவும் -பூமி மண்டலமும் மேரு மலையும்;
ஒருங்கு உடன் சாயும் -
ஒரு சேர உடனே (அந்தப் பக்கமாகச்) சாய்ந்து
விடும்;ஏயின் -எழுந்து உலாவினால்;மண்தலம் -இந்தப் பூமி;எள் இட
இடமின்றி இரியும் -
எள் இடுவதற்கும் இடம் இல்லாமற்போகும்;காயின் -
சினம் கொள்ளுமாயின்;வெங்கனல் கடவுளும் -கொடிய அக்கினிதேவனும்;
இரவியும் -
சூரியனும்;கரியும் -வெந்து கருகிவிடும்.

     இச் செய்யுள் வானர சேனையின் மிகுதியையும், பெரு வலிமையையும்
குறிக்கிறது.  இச் செய்யுள் அடிமறிமாற்றுப் பொருள்கோள் அமைப்புடையது.
எந்த அடியை எங்கே கூட்டினும் பொருளும் ஓசையும் வேறுபடா.

     ஏயின் - எழுந்துஉலாவினால்.                               23

4430. எண்ணின், நான்முகர்
      எழுபதினாயிரர்க்கு இயலா;
உண்ணின் அண்டங்கள் ஓர்
      பிடி உண்ணவும் உதவா;
கண்ணின் நோக்கறின், கண்ணுதலானுக்கும்
      கதுவா, -
மண்ணின் மேல் வந்த
      வானர சேனையின் வரம்பே!

     மண்ணின்மேல் வந்த -பூமியின்மேல் ஒருங்கு திரண்டு வந்த;வானர
சேனையின் வரம்பு -
வானரப் படையின் அளவை;எண்ணின் -எண்ணத்
தொடங்கினால்;நான்முகர் எழுபதினாயிரர்க்கு -எழு பதினாயிரம்
பிரமர்களுக்கும்;இயலா - முடியாது;உண்ணின் -(இவ் வானர சேனைகள்)
உண்ணத் தொடங்கினால்;அண்டங்கள் -அண்டங்களும் யாவும்;ஓர் பிடி
உண்ணவும் உதவா -
ஒவ்வொரு வானரமும்