பவளம் போன்று சிவந்த வாய்க்கு;உவமை பாவித்து -(தக்க) உவமைப் பொருளைக் கருதி;உவந்தபோது -தமக்கு மகிழ்ச்சியுண்டான காலத்தில்; உவந்தவண்ணம் உரைத்தபோது -மனத்துக்கு உவந்தவித மாக எடுத்துச் சொன்னால்;உரைத்தது ஆமோ -அவ்வாறு சொன்னது பொருத்தமானதாக ஆகுமோ? (ஆகாது). அமிழ்தம் வெண்ணிறமானது; செந்நிறமுடையதன்று; தேன் செந்நிறமுடையதாயினும் சீதையின் வாய்ப்போலச் செந்நிறமுடையதன்று; மேலும், அவை எடுத்து உண்டால் மாத்திரமே இனிமையைத் தருவன; ஆனால், இச்சீதையின்வாயோ நினைத்தமாத்திரத்தில் இனிமையைத் தருவது. ஆதலால், அப் பொருள்கள் சீதையின் வாய்க்கு உவமையாகாவாம். உள்ளக் களித்தலும் காண மகிழ்தலும் கள்ளுக்கு இல், காமத்திற்கு உண்டு (1281) என்ற குறளில் இந்தக் கற்பனைக்கு வித்து அமைத்திருத்தலைக் காணலாம். வேற்றுமையணியை அங்கமாகக் கொண்டுவந்த எதிர்நிலையணி. பவர்தல் - செறிதல். உவந்தபோது உவந்தவண்ணம் உரைத்தல் - தோன்றியபடி உண்மையை ஆராயாமல் வாய்க்க வந்தவாறு உரைத்தல். 50 | 4497. | 'முல்லையும் முருந்தும், முத்தும், முறுவல் என்று உரைத்தபோது, சொல்லையும், அமிழ்தும், பாலும், தேனும் என்று உரைக்கத் தோன்றும்; அல்லது ஒன்று ஆவது இல்லை; அமிர்திற்கும் உவமை உண்டோ? வல்லையேல், அறிந்துகோடி, மாறு இலா ஆறு - சான்றோய்! |
சான்றோய் -சால்புக் குணம் மிகுந்தவனே!முறுவல் -(சீதையின்) பற்கள்;முல்லையும் -முல்லையரும்புகளையும்;முருந்தும் -மயிலிறகின் அடியையும்;முத்தும் -முத்துக்களையும் (ஒப்பனவாம்);என்று உரைத்தபோது -என்று சொன்ன காலத்தில்;சொல்லையும் -அவள் சொற்களைக் குறித்தும்;அமிழ்தும் -தேவரமிழ்தையும்;பாலும் -பாலையும் தேனும் -தேனையும்; (போலும்);என்று உரைக்கத் தோன்றும் -என்ற உரைக்க (மனத்தில்) எண்ணம் உண்டாகும்;அல்லது -(இவ்வாறு இவற்றிற்கு இவற்றை உவமையாகக் கூறவேண்டும் என்ற முறை) அல்லாமல்;ஆவது ஒன்றும் இல்லை -(அவள் பற்களுக்கு) உவமையாகும் பொருள் ஒன்றும் இல்லை;அமிர்திற்கும் உவமை உண்டோ -தேவாமிர்தத்திற்கும் உவமையாகக் கூறும் (சிறப்புப் பொருள்) உண்டோ?வல்லையேல் -உனக்கு வல்லமை இருந்தால்;மாறு இலா ஆறு -வேறு உவமை இல்லாத தன்மையை;அறிந்து கோடி -(சீதையின் பற்கள் இத் தன்மையன என்று ஊகித்து) அறிந்து கொள்வாய். அமிழ்தம் முதலியன சொற்களுக்கு உவமையாகாதவாறு போல முல்லை முதலியனவும் பற்களுக்கு உவமையாகா என்பது. மேலும், சீதையின் பற்களுக்கு உவமையாவதற்குப் பொருந்தாத முல்லையரும்பு முதலியவற்றை |