| 4499. | 'வள்ளை, கத்திரிகை வாம மயிர் வினைக் கருவி என்ன, பிள்ளைகள் உரைத்த ஒப்பைப் பெரியவர் உரைக்கின் பித்து ஆம்; வெள்ளி வெண் தோடு செய்த விழுத் தவம் விளைந்தது என்றே உள்ளுதி; உலகுக்கு எல்லாம் உவமைக்கும், உவமை உண்டோ? |
வள்ளை -(பெண்களின் காதுகளுக்கு) வள்ளைக் கொடியின் இலையும்; கத்தரிகை -கத்திரிக் கோலும்;வாம மயிர் வினைக்கருவி -அழகிய மயிர் நீக்கும் கருவியும்;என்ன -என்று;பிள்ளைகள் உரைத்த ஒப்பை - அறிவு நிரம்பாதவர்கள் சொல்லிய உவமைகளை;பெரியவர் -அறிவு முதிர்ந்த சான்றோர்;உரைக்கின் -(சீதையின் காதுகளுக்கு உவமைகளாகச்) சொன்னால்;பித்து ஆம் -(அது) பித்தம் பிடித்தவர் சொல்லாகும் (சிறிதும் பொருந்தாது);வெள்ளி வெண்தோடு -(அவள் அணிந்துள்ள) வெள்ளி போன்ற வெண்ணிறமான தோடு என்னும் காதணி;செய்த -முன்பு செய்த; விழுத் தவம் விளைந்தது என்றே -சிறந்த தவமே (சீதையின் செவிகளாக) வந்தது என்றே;உள்ளுதி -நினைவாய்;உலகுக்கெல்லாம் -உலகிலுள்ள பொருள்களுக்கெல்லாம்;உவமைக்கும் -உவமையாகச் சொல்லுதற்குரிய ஒன்றுக்கும்;உவமை உண்டோ -வேறு ஓர் உவமைப் பொருள் கிடைக்குமோ? சீதையின் காதுகள் உலகிலுள்ள அழகிய பெண்களின் காதுகளுக்கும் தாம் உவமையாகுமாறு அழகு மிகுந்திருப்பதால், அவற்றிற்கு வேறு ஓர் உவமானப் பொருள் இல்லை என்பது. பிள்ளைகள்: இளமைத் தன்மையர்; அறிவு நிரம்பாதவர்கள். வள்ளை - முதலாகு பெயர். வேற்றுப்பொருள் வைப்பணி. 53 | 4500. | 'பெரிய ஆய், பரவை ஒவ்வா; பிறிது ஒன்று நினைந்து பேச உரிய ஆய், ஒருவர் உள்ளத்து ஒடுங்குவ அல்ல; உண்மை தெரிய, ஆயிரக் கால் நோக்கின், தேவர்க்கும் தேவன் என்னக் கரிய ஆய், வெளிய ஆகும், வாள் தடங் கண்கள் அம்மா! |
தேவர்க்கும் தேவன் என்ன -தேவர்களுக்கெல்லாம் தேவனான திருமாலைப் போன்று;கரிய ஆய் -கருமையாகியும்;வெளிய ஆகும் - வெண்மையாகியுமுள்ள;வாள் தடங் கண்கள் -ஒளி பொருந்திய பெரிய கண்கள்;உண்மை தெரிய -(அவற்றின்) உண்மையான தன்மை |