பருமையாகப் பனிச்சைக் கொண்டை முதலியனவாகச் செய்வதாகலின் 'நேர்மையைப் பருமை செய்த' என்றான். நீத்தம்: கூந்தல் தொகுதியைக் குறித்தது. சும்மை - சுமை என்பதன் விரித்தல். ஆவி: நறும்புகை. உறீஇ - உறுவித்து; பிறவினையெச்சம். 59 4506. | 'புல்லிதழ் கமலத் தெய்வப் பூவிற்கும் உண்டு; பொற்பின் எல்லையின் மதிக்கும் உண்டாம், களங்கம் என்று உரைக்கும் ஏதம்; அல்லவும் சிறிது குற்றம் அகன்றில; அன்னம் அன்ன நல் இயலாளுக்கு, எல்லாம் நலன் அன்றி, பிறிது உண்டாகுமோ? * |
தெய்வக் கமலப் பூவிற்கும் -தெய்வத் தன்மையுள்ள தாமரைப் பூவிற்கும்;புல்லிதழ் உண்டு -பயனற்றதான (அதனை மேலே தழுவியுள்ள) புறவிதழாகிய குற்றமுண்டு;பொற்பின் எல்லையின் மதிக்கும் -அழகின் வரம்பாகிய சந்திரனுக்கும்;களங்கம் என்று உரைக்கும் ஏதம் - களங்கமென்று சொல்லுகின்ற குற்றம்;உண்டாம் -உள்ளதாகும்;அல்லவும் - இவை அல்லாமல் மற்றுமுள்ள சிறந்த பொருள்களும்;சிறிது குற்றம் அகன்றில -சிறிதளவாவது குற்றம் இல்லாமல் இருக்கமாட்டா (ஒவ்வொரு பொருளுக்கும் ஓரளவாவது குற்றம் உண்டு);அன்னம் அன்ன நல் இயலாளுக்கு -அன்னப் பறவை போன்ற அழகிய நடையையுடையவளாகிய சீதைக்கு;எல்லாம் நலன் அன்றி -முழுவதும் நன்மையேயல்லாமல்;பிறிது உண்டாமோ -வேறொன்றாகிய குற்றம் உண்டோ? (இல்லை என்றவாறு). ஆல் - தேற்றம். தாமரைமலர்க்கும் புறவிதழாகிய குற்றமுள்ள; சந்திரனுக்கும் களங்கமாகிய குற்றம் இருக்கின்றது; இவ்வாறு. பல சிறப்பான குணங்களையுடைய உயர்ந்த பொருள்களிலும் ஏதேனும் குற்றம் இருத்தல் உலகவியல்பு: ஆனால் இச் சீதைக்கோ முழுவதும் குணமேயன்றிக் குற்றம் சிறிதுமில்லை என்பது. எடுத்துக் காட்டுவமையணி. திருமகள் தன்னிடத்தில் தங்குமாறு நிற்றலால் தாமரை மலரை 'கமலத் தெய்வப்பூ' என்றார். புல்லிதழ் - பண்புத் தொகை. 60 4507. | 'மங்கையர்க்கு ஓதி வைத்த இலக்கணம், வண்ண வாசப் பங்கயத் தவட்கும், - ஐயா! - நிரம்பல; பற்றி நோக்கின், செங் கயல் கருங்கண் செவ் வாய்த் தேவரும் வணங்கும் தெய்வக் கொங்கை அக் குயிலுக்கு ஒன்றும் குறைவு இலை; குறியும் அஃதே. |
|