பக்கம் எண் :

பிலம் புக்கு நீங்கு படலம் 587

4543. நன் புலன் நடுக்குற,
      உணர்வு நைந்து அற,
பொன் பொலி யாக்கைகள்
      புழுங்கிப் பொங்குவார்,
தென் புலம் தங்கு
      எரி நரகில் சிந்திய
என்பு இல் பல் உயிர்
      என, வெம்மை எய்தினார்.

     நன்புலன் நடுக்குற -(அங்கே சென்ற வானர வீரர்கள்) நல்ல
ஐம்பொறிகளும் நடுங்கவும்;உணர்வு நைந்து அற -அறிவு தேய்ந்து
ஒழியவும்;பொன் பொலியாக்கைகள்-பொன் போல விளங்கும் உடல்கள்;
புழுங்கிப் பொங்குவார் -
வியர்த்து மனம் கொதிப்பவர்களாய்;தென்புலம்
தங்கு -
தெற்குத் திசையில் இருக்கின்ற;எரி நரகில் -(எமனது); எரியும்
நரகத்தில்;சிந்திய -விழுந்து வருந்துகின்ற;என்பு இல் பல் உயிர் என -
(எலும்பில்லாத உடம்பையுடைய) புழு முதலான பல உயிர்த்தொகுதிகளைப்
போல;வெம்மை எய்தினார் -கொதிப்பையடைந்தார்கள்.

     அங்கே சென்ற வானரர்கள் நிலத்தின் வெம்மையைப் பொறுக்க
முடியாமல் புழுத்துடிப்பதுபோலத் துடித்தார்கள் என்பது.  வானரர்கள்
வெயிலில் துடிப்பதற்கு என்பு இல் பல்லுயிர் துன்பப்படுவதை உவமை
கூறினார்.  தென்புலத்தவன்: எமன்.  என்பு இல் பல் உயிர்: புழுக்கள்.
'என்பிலதனை வெயில்போலக்காயுமே' - குறள்: 77                     23

4544. நீட்டிய நாவினர்; நிலத்தில் தீண்டுதோறு
ஊட்டிய வெம்மையால் உலையும் காலினர்;
காட்டினும் காய்ந்து, தம் காயம் தீதலால்,
சூட்டு அகல்மேல் எழு பொரியின் துள்ளினார்.

     நீட்டிய நாவினர் -(அந்த வானரர்கள் நீர் வேட்கையால்) வெளியே
தொங்கிய நாக்கையுடையவர்களாயினர்;நிலத்தில் தீண்டுதோறு ஊட்டிய -
நிலத்தில் அடிவைக்கும் தோறும் கீழிருந்து தாக்கிய;வெம்மையால் -
வெப்பத்தால்;உலையும் காலினர் -கொப்புளம் கண்ட
அடிகளையுடையவர்களுமாயினர்;காட்டினும் காய்ந்து -அப்
பாலைவனத்தைக் காட்டிலும் மிகுதியாகச் சூடேறி;தம் காயம் தீதலால் -
தங்கள் உடம்பு கரிந்து தீய்ந்ததால்;சூட்டுஅகல்மேல் எழு பொரியின் -சூடு
கொண்ட சட்டியிலிருந்து மேலெழுகின்ற நெற்பொரிகள் போல;துள்ளினார் -
துடித்தார்கள்.

     மிகுந்த நீர் வேட்கையால் நாவை வெளியே நீட்டுதலும்,
பொறுக்கமுடியாத மிக்க வெப்பத்தால் கால்கள் கொப்புளித்தலும் இயல்பு.
நெருப்பினால்