பக்கம் எண் :

பிலம் புக்கு நீங்கு படலம் 589

வெப்பமான பாலை நிலத்தில் செல்வதையாவது தடுக்கும்; (ஆகவே) நன்று
என -
(இப் பிலத்துள செல்வதே) நல்லது என்று;மனத்தின் எண்ணினார் -
மனத்திற் கருதியவர்களாய்;போய்ச் சில அறிதும் என்று -(இதனுள்) சென்று
அங்குள்ள சிலவற்றை ஆராய்வோமென்று கூறி;அதனில் புக்கனர் -
அப்பிலத்தினுள் புகுந்து சென்றார்கள்.

     இந்தப் பாலைவனத்தில் இனி ஒரு நொடி செல்வதும் உயிரழிவுக்கே
காரணமாகும்;ஆகவே, இங்கே காணப்படுகின்ற பில வழியில் சென்றால் அது
சீதையிருக்கும் இடமாக இல்லாவிட்டாலுங் கூடப் பாலை நிலத்தின்
வெம்மையையாவது தணிக்கும்: ஆதலால், இப்போது இங்கே செல்வதே நாம்
செய்யத்தக்கது; மேலும், இதனுள்ளிருக்கும் சில இடங்களிலும் சீதையைத்
தேடிப் பார்ப்போ மென்று கருதி வானர வீரர்கள் அப் பிலத்தினுள் புகுந்தனர்
என்பது.

     திண் பிலம் - எளிதில் கடத்தற்கரிய பிலம்.

     ஒழியவும் - இழிவு சிறப்பும்மை.

     'ஒழிய' என்னும், செயவென்னெச்சம் தொழிற்பெயர்த்  தன்மைத்தாகித்
'தடுத்தல்' தொழிற்குச் செயப்படு பொருளாய் நின்றது.                  26

வானரர் இருளில் வருந்துதல்

4547.அக் கணத்து, அப்
      பிலத்து அகணி எய்தினார்,
திக்கினொடு உலகு உறச்
      செறிந்த தேங்கு இருள்,
எக்கிய கதிரவற்கு
      அஞ்சி, ஏமுறப்
புக்கதே அனையது ஓர்
      புரை புக்கு எய்தினார்.

     அக்கணத்து -(வானர வீரர்கள்) அப்பொழுது;அப்பிலத்து அகணி
எய்தினார் -
அந்தப் பிலத்தின் உள்ளிடத்தையடைந்தவர்களாய்;திக்கினொடு
உலகு உற -
நான்கு திசைகளிலும் இவ்வுலகத்தும்;செறிந்த தேங்கு இருள் -
மிக நெருங்கி நிறைந்த பேரிருள்;எக்கிய கதிரவற்கு அஞ்சி -(வானத்தில்)
ஏறிய சூரியனிடம் அச்சங் கொண்டு;ஏமுறப்புக்கதே அனையது -பாதுகாப்பு
அடையப் புகுந்தது போலத் தோன்றுவதாகிய;ஓர்புரை -ஒரு குகையில்;
புக்கு எய்தினார் -
புகுந்து சென்றார்கள்.

     வானர வீரர் பிலத்துள் புகுகையில் அதனிடையிலே இருள் செறிந்த ஒரு
குகையிலே நுழைந்து செல்லலாயினர் என்பது.

     அங்கு நிறைந்திருந்த இருளை, தனக்குப் பகைவனான கதிரவனுக்கு
அஞ்சிப் பிலத்துள் பதுங்கியிருப்பதாகக் குறித்தது தன்மைத்
தற்குறிப்பேற்றவணியாம்.  எக்கிய - ஏறிய (திசைச் சொல்) அகணி -
உள்ளிடம்; புரை: உள்ளறை; (ஏமமுற): ஏமுறு: தொகுத்தல் விகாரம்.      27