| 4548. | எழுகிலர்; கால் எடுத்து ஏகும் எண் இலர்; வழி உளது ஆம் எனும் உணர்வு மாற்றினார்; இழுகிய நெய் எனும் இருட் பிழம்பினுள், முழுகிய மெய்யர் ஆய், உயிர்ப்பு முட்டினார். * |
(அவர்கள்) எழுகிலர் -(அப்பாலே செல்ல) எழுந்து புறப்படாமலும்; கால் எடுத்து ஏகும் எண்இலர் -அடிவைத்துச் செல்லும் கருத்தில்லாமலும்; வழி உளது ஆம் எனும் -அப்பாலே செல்லுவதற்குரிய வழியுள்ளது என்னும்;உணர்வு மாற்றினார் -உணர்வையும் மாற்றிக் கொண்டவர்களாய்; இழுகிய நெய் எனும் -விழுதாக உறைந்த நெய் போன்ற;இருட் பிழம்பினுள் -இருளின் தொகுதியில்;முழுகிய -மூழ்கி விட்ட;மெய்யர் ஆய் -உடம்பையுடைவர்களாய்; (ஒருவர்க்கொருவர் இருப்பிடம் அறிந்து கொள்ள முடியாமல்);உயிர்ப்பு முட்டினார் -(மனத்துயராலும் அச்சத்தாலும்) பெருமூச்செறிந்தார்கள். வானரவீரர் இருட்பிழம்பினுள் அகப்பட்டுக் கொண்டதால் மேற்கொண்டு செய்யும் செயலில் நாட்டமில்லாது ஒருவரையொருவர் காணமுடியாது திகைத்துப் பெருமூச்சுவிட்டார்கள் என்பது. உயிர்ப்பு முட்டுதல் : மூச்சுமுட்டுதல் என்பது வழக்கு. 28 வானரர் வேண்டிக் கொண்டபடி, அனுமன் அவர்களைக் கொண்டு செல்லுதல் | 4549. | நின்றனர், செய்வது ஓர் நிலைமை ஓர்கிலர், 'பொன்றினம் யாம்' எனப் பொருமும் புந்தியர், 'வன் திறல் மாருதி! வல்லையோ எமை இன்று இது காக்க?' என்று, இரந்து கூறினார். |
செய்வது ஓர் நிலைமை -(அனுமனைத் தவிர மற்றைய வானர வீரர்கள்) இன்னது செய்யவேண்டும் என்ற செயலையும்;ஓர்கிலர் நின்றனர் - உணரமாட்டாது நின்றவர்களாய்;பொன்றினம் யாம் என -இறந்துவிட்டோம் நாம் என்று;பொருமும் புந்தியர் -வருந்துகின்ற மனமுடையவர்களுமாகி; வன்திறல் மாருதி -(அனுமனை நோக்கி) மிக்க வலிமையுடைய அனுமானே! இன்று -இப்பொழுது;எமை இது காக்க வல்லையோ -எங்களை இத்துயரத்திலிருந்து காப்பதற்கு வல்ல மையுடையையோ என்று முறையிட்டு; இரந்து கூறினார் -வேண்டிக் கொண்டார்கள். இருள் தொகுதியில் அகப்பட்டுக் கொண்ட அந்த வானரவீரர் தம்மை இறந்து போனவர்களாகவே கருதி வருத்தமுற்று அனுமனை விளித்து, 'இன்று |