பொன் பெருங் கோபுரப் புரிசை புக்கது -பொன்னிறமான உயர்ந்த கோபுரங்களையுடைய மதில்கள் அமையப் பெற்றது;அமரரும் அற்புதம் எய்தல் ஆவது -தேவர்களும் (கண்டு) வியப்படையக் கூடியது;சிற்பமும் - சிற்ப வேலைகளும்;மயன் மனம் வருந்திச் செய்தது -மயன் என்னும் அசுரத் தச்சன் (பலநாள்) மனம் வருந்தித் துன்பப்பட்டு அமைத்தது. இந்த நகரம் பொன்மயமான மரங்களையுடையதென்பதும், பொன்னுலுகில் வாழும் தேவர்களும் கண்டு வியப்படையுமாறு தோற்றச் சிறப்புடையதென்பதும், அசுர சிற்பியான மயனால் அமைக்கப்பட்டதென்பதும் இதிற் குறிக்கப் பெற்றுள்ளன. எல்லாவற்றையும் எளிதில் நினைத்த மாத்திரத்தில் செய்யக்கூடிய மயன் என்னும் அசுரத் தச்சனும் பல நாட்கள் மனத்தால் எண்ணிச் சிந்தித்துச் செய்யப் பெற்றது என்று அந்த நகரத்தின் அருமையும், பெருமையும் கூறினார். 33 | 4554. | இந்திரன் நகரமும் இணை இலாதது; மந்திர மணியினின், பொன்னின், மண்ணினில், அந்தரத்து எழு சுடர்அவை இன்று ஆயினும், உந்த அரும் இருள் துரந்து, ஒளிர நிற்பது; |
இந்திரன் நகரமும் -(இன்னும் அந்த மாநகரம்) இந்திரன் நகரமாகிய அமராவதியும்;இணை இலாதது -தனக்கு இணையாகப் பெறாத தகுதியுடையது;அந்தரத்து எழு சுடர் அவை -வானத்தில் உதிக்கிற கதிரவன், சந்திரன் என்ற இரண்டு சுடர்களும்;இன்றாயினும் - (அங்கே) தோன்றவில்லை யென்றாலும்;மந்திர மணியினின் -(அந்த நகரத்தின்) மாளிகைகளில் பதிக்கப் பெற்ற மாணிக்கங்களினாலும்;பொன்னின் - பொன்னாலும்;உந்த அரும் இருள் -நீக்குவதற்கு அரிய பேரிருளையும்; துரந்து ஒளிர நிற்பது -அகற்றி ஒளி விளங்கச் செய்வது. அந்தப் பிலத்தின் உட்புறத்திலுள்ள அந்த நகரம் சூரிய சந்திரர்களின் ஒளியைப் பெறுவதற்கு வாய்ப்பில்லாவிட்டாலும் தன்னிடம் நிரம்பியுள்ள மாளிகை இரத்தினங்களாலும், பொன்னாலும் காரிருளையொழித்து விளங்கும் என்பது. மந்திரம் : அரண்மனை. 34 | 4555. | புவி புகழ் சென்னி, பேர் அமலன், தோள் புகழ் கவிகள்தம் மனை என, கனக ராசியும், சவியுடைத் தூசும், மென் சாந்தும், மாலையும், அவிர் இழைக் குப்பையும், அளவு இலாதது; |
|