தாமரை மலர்க்கு உவமை -தாமரை மலருககு உவமையாகின்ற;சால்பு உறு -சிறப்பு வாய்ந்த;தளிர்க் கை -தளிர்போன்ற (தன் மெல்லிய) கைகள்; பூ மருவு -அழகு வாய்ந்த;பொன்செறி -பொன்னிறமான ஒன்றோடு ஒன்று நெருங்கிய;குறங்கிடை பொருந்த -தொடைகளிடத்தில் பொருந்தவும்;காமம் முதல் -காமம் முதலாக;உற்ற பகை கால்தளர -பொருந்திய உட்பகைகள் அழிந்தொழியவும்;ஆசை நாமம் அழிய -ஆசை என்னும் பெயரே அழியப்பெறவும்;புலனும் நல்லறிவு புல்ல -ஐம்பொறிகளும் (தீய வழியிற் செல்லாது) நல் லுணர்வைப் பொருந்தவும். சுயம்பிரபை தன் இரு கைகளையும் இரண்டு தொடைகளின்மேல் வைத்துக் கொண்டு, உட்பகையையொடுக்கிப் பற்றற்று மனத்தை யோகத்திற் செலுத்தியிருந்தாள் என்பது. காமம் முதல் உற்றபகை: காமம், குரோதம், உலோபம், மோகம், மதம், மாற்சரியம் என்ற உட்பகைகள். 'காமம் முதலுற்ற பகை கால் தளர வாசை நாமம் அழிய' என்றதனால் 'பொய் கொலைகளவே காமம் பொருள்நசை இவ்வகை யைந்தும் அடக்கியது இமயம்' என்று சொல்லப்பட்ட இயமமும், 'புலனும் நல்லறிவு புல்ல' என்றதனால் 'பொறியுணர்வெல்லாம் புலத்தின் வழாமல் ஒரு வழிப்படுப்பது தொகைநிலைப் புறனே' என்று கூறப்பெற்ற பிரத்தியாகாரமும் சொல்லப்பட்டவாறு அறியலாம். கால்தளர்தல் -அழிதல். ஒப்பு: 'காமம் வெகுளி மயக்கமிவை மூன்றின் நாமங் கெடுக்கெடும் நோய்' - குறள்:360. 48 | 4569. | நெறிந்து நிமிர் கற்றை நிறை ஓதி நெடு நீலம் செறிந்து சடை உற்றன தலத்தில் நெறிசெல்ல, பறிந்து வினை பற்று அற, மனப் பெரிய பாசம் பிறிந்து பெயர, கருணை கண்வழி பிறங்க, |
நெறித்து -நெறிப்புக் கொண்டு;நிமிர் -நிமிர்ந்து;கற்றை நிறை - தொகுதியாக நிறைந்த;நெடு நீலம் ஓதி -நீண்ட கருமையான கூந் தலானது; செறிந்து சடை உற்றன -அடர்ந்த சடையாகத் திரண்டு அமைந்ததாகி; தலத்தின் நெறி செல்ல -பூமியிடத்தில் புரளவும்;வினை பறிந்து பற்று அற-நல்வினை, தீவினைகள் ஆகிய இரண்டும் அடியோடு நீங்கவும்;மனப் பெரிய பாசம் -மனத்தில் உண்டாகக் கூடிய பெரிய பாசப்பற்று;பிறிந்து பெயர -விலகியொழியவும்;கருணை கண்வழி பிறங்க -அருளானது விழிகளில் தோன்றி விளங்கவும். வினை முடிபு: செல்ல, பற்றற, பெயர, பிறங்க, என்னும் எச்சங்கள் 50 ஆம் செய்யுளிலுள்ள 'இருந்தனள்' என்பதனையே கொண்டு முடியும். ஞான யோகத்தின்முன் கன்ம வினைகள் தீயின்முன் பஞ்சுபோலாகும் என்பது பற்றி 'வினை பறிந்து பற்றற' எனப்பட்டது. பாசம்: கயிறு - இங்கே உவமையாகு பெயராய் மனத்தைப் பிணிக்கும் பாசமாயிற்று. பூமியிற் கிடந்து புரள்வதெனச் சடைக்கற்றையின் நீளத்தைக் குறித்தார். அருளைக் கண்ணோட்டம் என்பார். ஆதலால், கருணை கண்வழி பிறங்க என்றார். பிறிந்து: அடியோடும் பெயர்க்கப்பட்டு. எதுகை நோக்கிப் 'பிரிந்து' என்ற சொல் 'பிறிந்து' என்றாயது. 49 |