பக்கம் எண் :

பிலம் புக்கு நீங்கு படலம் 603

சுயம்பிரபையைச் சீதையோ என ஐயுறுதல்

4570.இருந்தனள் - இருந்தவளை
      எய்தினர் இறைஞ்சா,
அருந்ததி எனத் தகைய
      சீதை அவளாகப்
பரிந்தனர்; பதைத்தனர்; 'பணித்த
      குறி, பண்பின்
தெரிந்து உணர்தி; மற்று
      இவள்கொல், தேவி?' எனலோடும்,

     இருந்தனள் -(அவ்வாறு) இருந்தாள்;இருந்தவளை -அப்படி
வீற்றிருந்த சுயம்பிரபையை வானரவீரர்கள்;எய்தினர் இறைஞ்சா -அணுகி
வணங்கி;அருந்ததி எனத்தகைய சீதை அவளாக -அருந்ததி யென்று
சொல்லத் தகுந்த கற்புடைய சீதையாகவே நினைத்து;பரிந்தனர் -(அவளிடம்)
அன்பு பூண்டனர்;பதைத்தனர் -பரபரப்பு அடைந்தனர்;இவள் தேவி
கொல் -
(அனுமனைப் பார்த்து) இவள் சீதைதானா? பணித்த குறி -
(இராமன்) கூறிய அங்க அடையாளங்களைக் கொண்டு;பண்பில் தெரிந்து
உணர்தி -
முறையாக ஆராய்ந்து தெளிந்து அறிவாயாக;எனலோடும் -
என்றுகேட்ட அளவில்.

     மாருதி உரைத்தான் என அடுத்த கவியோடு தொடர்ந்து முடியும்.
முன்னர் நகரையும், மாளிகையையும், குகையையும் கண்டு இராவணன்
சீதையை ஒளித்த இடம் இவையோயென ஐயுற்ற வீரர்கள் இங்கும்
சுயம்பிரபையின் அழகைக் கண்டு அவளைச் சீதையென மயங்கினர் என்பது.
சீதையவள்: அவள் - பகுதிப் பொருள் விகுதி.  அருந்ததி: வசிட்டரின்
மனைவி; கற்புடைப் பெண்களுக்கு உவமை கூறப்படுபவள்.  இறைஞ்சா:
செய்யா என்னும் வாய்ப்பாட்டு வினையெச்சம்.                      50

4571.'எக் குறியொடு எக் குணம்
      எடுத்து இவண் உரைக்கேன்?
இக் குறியுடைக் கொடி
     இராமன் மனையாளோ?
அக்கு வடம், முத்தமணி
      ஆரம்அதன் நேர் நின்று
ஒக்கும்எனின், ஒக்கும்' என,
      மாருதி உரைத்தான்.

     மாருதி -அனுமன் (அந்த வீரர்களை நோக்கி);எக்குறியொடு
எக்குணம் -
(சீதைக்குரிய உறுப்பிலக்கணங்களிலும் குணங்களிலும்) எந்த
அடையாளத்தை அல்லது எந்தக் குணத்தை;இவண் எடுத்து இசைக்கேன் -
இவளிடம் இருப்பதாக எடுத்துச் சொல்வேன்? இக்குறி