கூந்தலிலிருந்து நழுவி வந்து;புவனம் சேர்ந்த -பூமியையடைந்த;கோதை போல் கிடந்த -மலர்மாலை போல விளங்கிய;கோதாவரியினை - கோதாவரி என்னும் ஆற்றை;குறுகிச் சென்றார் -நெருங்கிச் சேர்ந்தார்கள். உயரமான இடத்திலேறிக் காண்பவர்க்கு ஆறுகள் வெண்மையான மலர் மாலைபோலத் தோன்றுமாதலால் கோதாவரி நதியை இராவணன் சீதையைக் கவர்ந்து செல்லும்போது அவளது கூந்தலிலிருந்து நழுவிக் கீழே விழுந்த மலர் மாலை போலுமென்று வருணித்தார். ஊதை: சீறி வீசுவதால் வேகத்திற்கு உவமை. வழீஇ: சொல்லிசையளபெடை. 27 | 4621. | எழுகின்ற திரையிற்று ஆகி, இழிகின்ற மண நீர் யாறு, - தொழுகின்ற சனகன் வேள்வி தொடங்கிய, சுருதிச் சொல்லால் உழுகின்ற பொழுதின், ஈன்ற ஒரு மகட்கு இரங்கி, ஞாலம் அழுகின்ற கலுழி மாரி ஆம் என - பொலிந்தது அன்றே. |
எழுகின்ற திரையிற்று ஆகி -மெலெழுந்து வீசியெறியும் அலை களையுடையதாகி;இழிகின்ற -பெருகி வருகின்ற;மணி நீர் யாறு -(நீலமணி போல) தெளிந்த நீரையுடைய அந்தக் கோதாவரி நதி;தொழு கின்ற சனகன் -யாவராலும் வணங்கப்படுகின்ற பெருமையுள்ள சனக மன்னன்;வேள்வி தொடங்கி -யாகத்தைத் தொடங்கிச் செய்யும் பொருட்டு;சுருதிச் சொல்லால் -வேத மந்திரங்களைச் சொல்லி;உழுகின்ற பொழுதின் -(கலப்பையால்) உழுகின்ற காலத்தில்;ஈன்ற -உழுபடைச்சாலின் வழியே (பூமி) பெற்றெடுத்த; ஒரு மகட்கு -ஒப்பற்ற அந்தச் சீதைக்காக;இரங்கி -(இராவணனால் ஏற்பட்ட துன்பத்திற்கு) மனம் வருந்தி;ஞாலம் -(அவளை ஈன்ற தாயான) பூமிதேவி;அழுகின்ற -அழுவதாலுண்டான;கலுழிமாரி ஆம் என - கலங்கலான கண்ணீர்ப் பெருக்கைப் போல;பொலிந்தது -விளங்கியது. அன்று, ஏ: ஈற்றசைகள். நிறைந்து பெருகக் கூடிய கோதாவரிநதியை பூமி தேவி தான் பெற்ற மகளான சீதைக்கு இராவணனால் நேர்ந்த வருத்தத்திற்காக இரக்கப்பட்டுப் பெருக்கும் கண்ணீர்போலுமென வருணித்தார். தன்மைத் தற்குறிப்பேற்றவணி. சனக மன்னன் அறிவிற் சிறந்த ஞானயோகியாதலால், யோகியர்களும், பெரியோர்களும் தொழுவதற்குரிய சிறப்புப் பெற்றவன்; அதனால் 'தொழுகின்ற சனகன்' எனப்பட்டான். யாகம் செய்பவர் முதலில் வேத மந்திரங்களை உச்சரித்துக் கொண்டு கலப்பையால் உழுது அங்கு யாகசாலையை அமைப்பது முறையாகும். சீதை : சீதா என்னும் வடசொல் படைச்சால் என்னும் பொருளுடையது; காரணப் பெயர். உழுகின்ற கொழுமுகத்தின் உதிக்கின்ற கதிரின் ஒளி பொழிகின்ற புவிமடந்தை திருமடந்தை வெளிப்பட்டென. . . . தோன்றினாள் |