ஆராய்ந்து அறியும் தன்மையுடைய வானரவீரர்;அந் நதி முழுதும் நாடி -அந்தக் கோதாவரி நதிப் பகுதி முழுவதும் தேடிப் பார்த்து; ஆய்வளை மயிலை -சிறந்த வளையல்களையணிந்த மயில் போன்ற சீதையை;யாண்டும் சந்நிதி உற்றிலாதார் -எதிரில் காணப் பெறாத அவர்கள்;நெடிது பின் தவிரச் சென்றார் -நீண்ட வழி பின்னால் கழியுமாறு முன்னேறிச் சென்றவர்களாய்;சொன்ன தீவினைகள் -நூல்களில் கூறிய பாவங்களையெல்லாம்;தீர்க்கும் சுவணகத் துறையில் -(தன்னில் படிவோர்க்குப்) பாவத்தைப் போக்குகின்ற சுவணக (சோணை) நதியிடத்தில்; புக்கார் -சென்று சேர்ந்தார்கள். ஆய்வளை மயில்: அடையடுத்த உவமையாகுபெயர். சந்நிதி: வடசொல்லின் திரிபு - எதிரேகாணல், சுவணகம்: ஒரு நதி; சோணம், சோணை எனவும் வழங்கப் பெறும். 30 4624. | சுரும்பொடு தேனும், வண்டும், அன்னமும், துவன்றி; புள்ளும், கரும்பொடு செந் நெல் காடும், கமல வாவிகளும், மல்கி; பெரும் புனல் மருதம் சூழ்ந்த கிடக்கை பின் கிடைக்கச் சென்றார்; குரும்பை நீர் முரஞ்சும் சோலைக் குலிந்தமும், புறத்துக் கொண்டார். |
சுரும்பொடு தேனும் வண்டும் -பொன்வண்டு, தேன்வண்டு, கருவண்டு என்னும் பலவகையான வண்டுகளும்;அன்னமும் -அன்னப் பறவைகளும்; துவன்றி -நெருங்கி;புள்ளும் -நாரை முதலான ஏனைய பறவைகளும்; கரும்பொடு -கரும்புகளும்;செந்நெல் காடும் -செந்நெற் பயிர்களும் அடர்ந்த நன்செய் இடங்களும்;கமல வாவிகளும் -தாமரைத் தடாகங்களும்; மல்கி -நிறைந்து;பெரும்புனல் மருதம் சூழ்ந்த -மிக்க நீர்வளங் கொண்ட மருதநிலம் சூழ்ந்துள்ள;கிடக்கை பின் கிடக்க -இடங்கள் தம் பின்னால் கிடக்கும்படி;சென்றார் -அப்பால் கடந்து சென்றனர் அந்த வானரவீரர்கள்; நீர்க் குரும்பை -இளநீர்க் காய்கள்;முரஞ்சும் சோலைக் குலிந்தமும் - நிரம்பிய தென்னஞ்சோலைகளையுடைய குலிந்த நாட்டையும்;புறத்துக் கொண்டார் -(தமது) பின்புறத்ததாகும்படி முன்னேறிச் சென்றார்கள். மருதநில: அன்னம் முதலிய பறவைகளையும், செந்நெல் முதலிய உணவு வகைகளையும் தாமரை மலர்களையும், பொய்கைகளையும் தன்னிடத்தே கொண்டது; வயலும் வயல் சார்ந்த பகுதிகளும் மருதம் ஆகும். சுரும்பு, தேன், வண்டு: வண்டுகளின் வகைகளைக் குறிக்கும் சொற்கள்; சுரும்பு; எல்லா மணத்திலும் செல்வது எனவும் தேன், வண்டு: நன்மணத்தே செல்வன எனவும் கூறுவர். இச் செய்யுளில் நிலம், நீர், பூ, பறவை, மரம் முதலியவற்றால் குவிந்த நாட்டின் மருத |