4652. | 'அருந் தவம் புரிதுமோ? அன்னது அன்றுஎனின், மருந்து அரு நெடுங் கடு உண்டு மாய்துமோ? திருந்தியது யாது? அது செய்து தீர்தும்' என்று இருந்தனர் - தம் உயிர்க்கு இறுதி எண்ணுவார். |
(கிட்கிந்தைக்கு மீண்டு செல்லாமல் இங்கிருந்தபடியே) அருந்தவம் - செய்தற்கரிய தவத்தை;புரிதுமோ -செய்வோமோ? அன்னது அன்று எனின் -அவ்வாறு செய்ய இயலா விட்டால்;மருந்து அரும் கடு உண்டு - மாற்ற மருந்து எதுவுமில்லாத கொடிய நஞ்சைக் குடித்து;மாய்துமோ -இறந்து அழிவோமோ?திருந்தியது யாது -(இந்த இரண்டில்) தகுதியானது எதுவோ; அது செய்து தீர்தும் -அதைச் செய்து முடிப்போம்;என்று இருந்தனர் - என்ற சொல்லி (அந்த மகேந்திர மலையில்) இருந்தவர்கள் (யாவரென்றால்); தம் உயிர்க்கு -தம் உயிர்களுக்கும்;இறுதி எண்ணுவார் -ஒரு முடிவைக் கருதிய அந்த வானரவீர்கள். தவணை நாட்கள் கழிந்த பின்பும் சீதையைக் கண்டுபிடித்தலாகிய செயலை நிறைவேற்றாது கடுந்தண்டனைதரவுள்ள சுக்கிரீவனை எதிரில் செல்வதற்கு அஞ்சியவர்களாய் வானரர் இவ்வாறு எண்ணிக் கூறினார்கள் என்பது. மருந்து அரு நெடுங்கடு: முறிவில்லாத நஞ்சு; மாற்று மருந்தில்லாத பெரு நஞ்சு. இராமனின் தொண்டில் ஈடுபட்டும் அப் பணியை நிறைவேற்றாது உயிர் வாழ்வதைவிட, உயிர் விடுவதே மேல் என்று அந்த வானர வீரர்கள் கருதினார்கள் என்பது குறிப்பு. 5 உடன்வந்தவரிடம் அங்கதன் உரைத்தல் 4653. | கரை பொரு கடல் அயல், கனக மால் வரை நிரை துவன்றிய என நெடிது இருந்தவர்க்கு, 'உரைசெயும் பொருள் உளது' என உணர்த்தினான் - அரசு இளங் கோள் அரி, அயரும் சிந்தையான்: |
அரசு இளங் கோள் அரி -இளவரசனும் சிங்கம் போன்றவனுமான அங்கதன்;அயரும் சிந்தையான் -வருந்திய மனத்தையுடையவனாய்;கரை பொரு கடல் அயல் -கரையை மோதுகின்ற அலை |