பக்கம் எண் :

662கிட்கிந்தா காண்டம்

     தேட வேண்டிய இடம் இன்னும் மிகுதியாக இருக்கவும், சிறிது தேடியதும்
சீதை கிடைக்காததைக் கொண்டே முழுவதும் திரிந்து அலைந்து
சலிபபடைந்தவர் போல நீங்கள் ஒரு சிறிதும் ஆலோசனையில்லாமல்
வெறுப்படைந்து உயிர்விடத் துணிவது சிறிதும் தகுதியில்லை என்று அனுமன்
கூறினான்.

     வலிமையிருந்தும் எதிலும் கருத்தில்லையென்றால் உங்கள் வீரத்
தன்மைக்கும் நேர்மைக்கும் குறைவாகுமென அனுமன் இடித்துரைத்தான்.

     கமனம்: செல்கை. தபனன்: வெப்பத்தால் வேகச் செய்பவன், சூரியன்
(கமனம், தபனன் என்றவடமொழிச் சொற்கள் இங்கே கவனம், தவனன் எனத்
திரிபுற்றன).                                                    19

4667.பின்னரும் கூறுவான்:
      'பிலத்தில், வானத்தில்,
பொன் வரைக் குடுமியில்,
      புறத்துள் அண்டத்தில்,
நல் நுதல் தேவியைக்
      காண்டும் நாம் எனின்,
சொன்ன நாள் அவதியை
      இறைவன் சொல்லுமோ?

     பின்னரும் கூறுவான் -அனுமன் மேலும் சொல்லுவான்;பிலத்தில் -
பாதாள உலகத்திலும்;வானத்தில் -தேவருலகத்திலும்;பொன் வரைக்
குடுமியில் -
பொன்மலையான மேரு மலைச் சிகரத்திலும்;புறத்துள்
அண்டத்தில் -
மற்றும் அப்பாலுள்ள அண்டங்களிலும்;நன்னுதல்
தேவியை-
அழகான நெற்றியையுடைய சீதையை;நாம் காண்டும் எனில் -
நாம்தேடிக் காண்போமானால்;இறைவன் -(நம்) அரசனான சுக்கிரீவன்;
சொன்னநாள் அவதியை -நமக்குக் குறித்த தவணை நாட்களில் எல்லை
கடந்ததைப்பற்றி;சொல்லுமோ -குற்றமாக எடுத்துக் கூறுவானோ?

     ஓ: வினா இடைச் சொல்.

     சீதையைத் தேடிக் காண்பது இன்றிமையாத தொழிலாதலால் தவணை
நாள் கடந்தமைக்குச் சிறிதும் கலங்காது நாம் மேற்கொண்ட செயலில்
ஊக்கங்கொள்வதுதான் தக்கது; அவ்வாறு அச் செயலை நாம் சிறப்பாகச்
செய்து முடித்தால் சுக்கிரீவன் நம் செயலைப் பாராட்டுவனேயல்லாமல் ஒரு
நாளும் கண்டிக்கவே மாட்டான் என்று அவ் வானரர்க்கு அனுமன்
எடுத்துரைத்தான்.                                             20

4668.'நாடுதலே நலம் இன்னும்; நாடி, அத்
தோடு அலர் குழலிதன் துயரின் சென்று, அமர்
வீடிய சடாயுவைப் போல வீடுதல்
பாடவம்; அல்லது பழியிற்று ஆம்' என்றான்.

     இன்னும் நாடுதலே நலம் -இனிமேலும் சீதையைத் தேடிப் பார்த்தலே
நற்செயலாகும் (ஆதலால்);  நாடி -நாம் தேடியும் (அச்சீதையைக்