பக்கம் எண் :

சம்பாதிப் படலம் 667

     (அனுமன் சம்பாதியை மேலும் நோக்கி) வெங்கதம் வீசிய மனத்தன் -
கொடிய கோபத்தை நீக்கிய மனத்தையுடையவனும் ;விம்மலன் -
(துக்கத்தால்) பொருமுகின்றவனும்;பொங்கிய சோரி நீர் பொழியும் -
பொங்கும் மழைபோல நீரைச் சொரிகின்ற;கண்ணினன் -
கண்களையுடையவனுமாயிருக்கின்றான் (ஆதலால், இவன்);சங்கையில் சழக்கு
இலன் -
மனத்திலே சிறிதும் குற்றம் இல்லாதவன்;என்னும் தன்மையை -
என்பதை;இங்கித வகையினால் -முகத்தின் குறிப்புகளினால்;எய்த
நோக்கினான் -
நன்றாக அறிந்து கொண்டான்.

     அனுமன், பிறர் முகக் குறிப்பறிந்து உண்மையையுணர்பவனாதலால்,
சீற்றமில்லாமலும், துயரத்தால கண்ணீரைப் பெருக்கியும் வருகின்ற
சம்பாதியைக் கண்டு அவன் குற்றமறறவன் என்பதைத் தெளிந்தான் என்பது.

     இங்கித வகை: குறிப்பால் உணருந் தன்மை. சங்கை: மனம்; சழக்கு:
குற்றம்.                                                      28

சடாயுவைக் கொன்றவர் யார் எனச் சம்பாதி வினவுதல்

4676.நோக்கினன், நின்றனன்,
      நுணங்கு கேள்வியான்,
வாக்கினால் ஒரு
      மொழி வழங்குறாதமுன்,
'தாக்க அருஞ் சடாயுவைத்
      தருக்கினால் உயிர்
நீக்கினர் யார்? அது
     நிரப்புவீர்!' என்றான்.

     நோக்கினன் நின்றனன் -(சம்பாதியின் வருகையை) நோக்கி எதிர்
நின்றவனும்;நுணங்கு கேள்வியான் -நுட்பமான கல்வி
கேள்விகளையுடையவனுமாகிய அனுமன்;வாக்கினால் ஒரு மொழி -தன்
வாயினால் ஒரு சொல்;வழங்குறாதமுன் -சொல்வதற்கு முன்னமே (சம்பாதி);
தாக்க அருஞ் சடாயுவை -
யாரும் எதிர்த்துப் போர் செய்ய முடியாத
வலிமையிடைய சடாயுவை;தருக்கினால் -சூரத்தனத்தால்;உயிர் நீக்கினர்
யார் -
உயிரைப் போக்கியவர் யார்? அது நிரப்புவீர் -அதை விரிவாக
எடுத்துக் கூறுங்கள்;என்றான் -என்று கேட்டுக் கொண்டான்.

     நிரப்புவீர்: அனுமன் ஒருவனை உயர்வு கருதிப் பன்மையில் கூறியது
என்றும், அங்கிருந்த மற்ற வானர வீரர்களை உளப்படுத்தியது என்றும்
கொள்ளலாம்.  நிரப்புதல்: குறையின்றி முழுவதும் கூறல்.          29

சம்பாதி தன் வரலாறு உரைத்தல்

4677.'உன்னை நீ உள்ளவாறு
      உரைப்பின், உற்றதைப்