பக்கம் எண் :

சம்பாதிப் படலம் 669

தனக்கு ஏற்பட்டுள்ள சோர்வைச் சம்பாதி இவ்வாற புலப்படுத்துகிறான்.
இடை(தல்) - சோர்தல். என்பு: ஆகுபெயர்.                       31

அனுமன், சடாயு இறந்தமை உரைத்தல்

4679. கூறிய வாசகம் கேட்ட, கோது இலான்
ஊறிய துன்பத்தின் உவரியுள் புகா
ஏறினன், உணர்த்தினன், 'இகல் இராவணன்
வீறிய வாளிடை விளிந்தது ஆம்' என்றான்.

     கூறிய வாசகம் கேட்ட -சம்பாதி சொன்னவற்றைக் கேட்ட;கோது
இலான் -
குற்றமற்றவனான அனுமன்;ஊறிய துன்பத்தின் உவரியுள்புகா -
மிக்க துன்பமாகிய கடலினுள் மூழ்கி;ஏறினான் -அதிலிருந்து ஒருவாறு
கரையேறினவனாகி;இகல் இராவணன் -(சடாயுவோடு) போர் புரிந்த
இராவணன்;வீறிய வாளிடை -வீசிய வாளினால்;விளிந்தது ஆம் -உன்
தம்பியின் மரணம் நேர்ந்ததாகும்;என்றான் உணர்த்தினன் -என்று
தெரிவித்தான்.

     சம்பாதியின் சொல் மனத்தைக் கரையச் செய்ததால் அதைக் கேட்ட
அனுமன் துயர்க் கடலிலே மூழ்கிப்பின் ஒருவாறு தெளிந்தான் என்பது.

     வீறிய வாள்: இராவணனுக்குச் சிவன் தந்த சந்திரகாசமென்னும் வாள்;
எனவே, பிறிதொன்றற்கு இல்லாத சிறப்புடையது.

     புகா:  செய்து என்னும் வாய்பாட்டு வினையெச்சம்.               32

சம்பாதி புலம்பல்

4680. அவ் வுரை கேட்டலும், அசனி ஏற்றினால்
தவ்விய கிரி எனத் தரையின் வீழ்ந்தனன்;
வெவ் உயிரா உயிர் பதைப்ப, விம்மினான்;
இவ் உரை, இவ் உரை, எடுத்து இயம்பினான்:

     அவ் உரை கேட்டலும் -(அனுமன் கூறிய) அந்தச் சொற்களைக்
கேட்டதும் (சம்பாதி);அசனி ஏற்றினால் -பேரிடியினால்;தவ்விய கிரி
என-
சிதைந்த மலை போல;தரையில் வீழ்ந்தனன் -தரைமீது விழுந்தான்;
வெவ் உயிரா -
வெப்பமாகப் பெருமூச்சுவிட்டு;உயிர் பதைப்ப -உயிர்
துடிக்க;விம்மினான் -தேம்பி வருந்தியவனாகி;இவ்உரை இவ்உரை -இந்த
இந்தச் சொற்களை;எடுத்து இயம்பினான் -எடுத்து எடுத்துச் சொல்லிப்
புலம்பினான்.

     ஏறு: சிறந்ததையும், பெரியதையும் 'ஏறு' என்றல் மரபு.  கீழே விழுதலும்,
வெப்பமாகப் பெருமூச் செறிதலும், உயிர் பதைத்தலும், விம்முதலும் துயரத்தின்
மெய்ப்பாடுகள்.  இவ்வுரை இவ்வுரை என்ற அடுக்கு: சோகத்தின் பலவற்றைக்
கூறுவதைக் குறிக்கும்.

     தவ்வுதல்:சிதைதல்.                                         33