பக்கம் எண் :

சம்பாதிப் படலம் 675

 அளித்தானே! அது நன்று!
      நன்று!' எனாக்
களித்தான் - வாரி
      கலுழ்ந்த கண்ணினான்.    *

     விளித்தான் -(இவ்வாறு) அனுமன் கூறினான்;அன்னது கேட்டு -
அச் சொற்களைக் கேட்டு;வாரி கலுழ்ந்த கண்ணினான் -நீரைச் சொரியும்
கண்களையுடையவனான சம்பாதி (அனுமனை நோக்கி);மெய்ம்மையோய் -
உண்மை நெறியில் நிற்பவனே;தெளித்து ஆடத்தகு -மனந் தெளிந்து
அனுபவித்தற்குரிய;தீர்த்தன் மாட்டு -புனிதனாகிய இராமபிரான் பொருட்டு;
உயிர் அளித்தானே -
(என் தம்பியான சடாயு) உயிரையும் கொடுத்தானே!
அது நன்று நன்று -அந்தச் செயல் மிகவும் நல்லது!எனாக் களித்தான் -
என்று மனமகிழ்ந்தான்.

     தெளித்து ஆடத்தகு தீர்த்தன் - முழுமுதற் கடவுள் என்று
உறுதிகொண்டு சரணமடைவதற்கு ஏற்ற புண்ணிய மூர்த்தி. தெளிந்து என்ற
சொல் எதுகை நோக்கி தெளித்து என வலித்தல் விகாரமாயிற்று.

     தீர்த்தன்மாட்டு உயிரளித்தான்: சீதையை மீட்டலும் இராம காரியமாகும்
என்பது கருதி. அளித்தானே - நன்று நன்று: ஏகாரமும் அடுக்கும் உவகைப்
பொருளன.                                                    43

4691.'பைந் தார் எங்கள் இராமன் பத்தினி,
செந் தாள் வஞ்சி, திறத்து இறந்தவன்,
மைந்தா! எம்பி வரம்பு இல் சீர்த்தியோடு
உய்ந்தான் அல்லது, உலந்தது உண்மையோ?

     மைந்தா -வீரமுள்ளவனே!பைந்தார் எங்கள் இராமன் -பசுமையான
மலர்மாலயணிந்தவனான எங்கள் இராமனின்;பத்தினி -மனைவியும்;
செந்தாள் வஞ்சி திறத்து -
சிவந்த அடிகளையுடைய வஞ்சிக் கொடி
போன்றவளுமான சீதையின் பொருட்டு;இறந்தவன் -உயிர் நீத்தவனாகிய;
எம்பி -
என் தம்பி சடாயு;வரம்பு இல் சீர்த்தியோடு -அளவில்லாத
புகழோடு;உய்ந்தான் அல்லது -நல்வாழ்வு பெற்றான் என்று
கூறாலாமேயல்லாமல்;உலந்தது -இறந்து போனான் என்பது;உண்மையோ-
உண்மைப் பொருளாகுமோ?

     சீதையை மீட்பதற்குத் தன்னுயிரைக் கொடுத்தவனாதலால் அவனது
பூதவுடம்பு அழிந்தும் புகழுடம்பு அழியாது நிலை நிற்கின்றது.  ஆதலால்,
அவன் இறந்தும் இறவாதவனாகவே வாழ்ந்துவருகிறான் என்பது. பசுமை:
புதுமை.

     செந்தாள் வஞ்சி: பண்புத் தொகைப் புறத்துப் பிறந்த அன்மொழித்
தொகை; அடையடுத்த உவமையாகு பெயருமாம்.

     'தன்னுயிர் புகழ்க்கு விற்ற சடாயு' - (5305)                    44