| அளித்தானே! அது நன்று! நன்று!' எனாக் களித்தான் - வாரி கலுழ்ந்த கண்ணினான். * |
விளித்தான் -(இவ்வாறு) அனுமன் கூறினான்;அன்னது கேட்டு - அச் சொற்களைக் கேட்டு;வாரி கலுழ்ந்த கண்ணினான் -நீரைச் சொரியும் கண்களையுடையவனான சம்பாதி (அனுமனை நோக்கி);மெய்ம்மையோய் - உண்மை நெறியில் நிற்பவனே;தெளித்து ஆடத்தகு -மனந் தெளிந்து அனுபவித்தற்குரிய;தீர்த்தன் மாட்டு -புனிதனாகிய இராமபிரான் பொருட்டு; உயிர் அளித்தானே -(என் தம்பியான சடாயு) உயிரையும் கொடுத்தானே! அது நன்று நன்று -அந்தச் செயல் மிகவும் நல்லது!எனாக் களித்தான் - என்று மனமகிழ்ந்தான். தெளித்து ஆடத்தகு தீர்த்தன் - முழுமுதற் கடவுள் என்று உறுதிகொண்டு சரணமடைவதற்கு ஏற்ற புண்ணிய மூர்த்தி. தெளிந்து என்ற சொல் எதுகை நோக்கி தெளித்து என வலித்தல் விகாரமாயிற்று. தீர்த்தன்மாட்டு உயிரளித்தான்: சீதையை மீட்டலும் இராம காரியமாகும் என்பது கருதி. அளித்தானே - நன்று நன்று: ஏகாரமும் அடுக்கும் உவகைப் பொருளன. 43 4691. | 'பைந் தார் எங்கள் இராமன் பத்தினி, செந் தாள் வஞ்சி, திறத்து இறந்தவன், மைந்தா! எம்பி வரம்பு இல் சீர்த்தியோடு உய்ந்தான் அல்லது, உலந்தது உண்மையோ? |
மைந்தா -வீரமுள்ளவனே!பைந்தார் எங்கள் இராமன் -பசுமையான மலர்மாலயணிந்தவனான எங்கள் இராமனின்;பத்தினி -மனைவியும்; செந்தாள் வஞ்சி திறத்து -சிவந்த அடிகளையுடைய வஞ்சிக் கொடி போன்றவளுமான சீதையின் பொருட்டு;இறந்தவன் -உயிர் நீத்தவனாகிய; எம்பி -என் தம்பி சடாயு;வரம்பு இல் சீர்த்தியோடு -அளவில்லாத புகழோடு;உய்ந்தான் அல்லது -நல்வாழ்வு பெற்றான் என்று கூறாலாமேயல்லாமல்;உலந்தது -இறந்து போனான் என்பது;உண்மையோ- உண்மைப் பொருளாகுமோ? சீதையை மீட்பதற்குத் தன்னுயிரைக் கொடுத்தவனாதலால் அவனது பூதவுடம்பு அழிந்தும் புகழுடம்பு அழியாது நிலை நிற்கின்றது. ஆதலால், அவன் இறந்தும் இறவாதவனாகவே வாழ்ந்துவருகிறான் என்பது. பசுமை: புதுமை. செந்தாள் வஞ்சி: பண்புத் தொகைப் புறத்துப் பிறந்த அன்மொழித் தொகை; அடையடுத்த உவமையாகு பெயருமாம். 'தன்னுயிர் புகழ்க்கு விற்ற சடாயு' - (5305) 44 |