பக்கம் எண் :

ஊர் தேடு படலம்125

     நெஞ்சம் கண்டேகல் என நின்றே என்பதை அவ்வாறே வைத்துப்
பொருள் செய்தல் ‘பாவம்’ என்னும் கவிதை நலத்துக்குத் துணையாகும்.

     கண்டு + ஏ எனப்பிரித்து, ஏகல் எனக் கூட்டிப் பொருள் செய்தலும்
ஒன்று.  ஏகல் - உயர்ந்த மலை - ஏகல் வெற்பன் என்னும் தொடர் சங்க
நூல்களில் காணலாம். ஏகல் வெற்பன் (குறுந் 265 நற்றிணை 116 அகம் 52)
கண்டு + ஏ என்று பிரித்து ‘ஏ’ யை அசை ஆக்கினர். ஏற்பின் கொள்க.
நினைவு - நினைவுடைச் சொற்கள் (கம்ப. 5255, சிந்தாமணி. 333) நினைவு -
எண்ணம் என்று பொருள் கொண்டோர் பட்ட இடர்ப்பாடு பெரிது. ஏ - கல்
எனப் பிரித்தல் வலிந்து செய்தலாகக் கருதுவார் ஏற்பன கொள்க.      (86)

4921.

கொல்வாம்; அன்றேல் கோளுறும் இவ்ஊர் எனல்
                                 கொண்டாள்;
‘வெல்வாய், நீயேல், வேறி’என, தன் விழிதோறும்
வல்வாய்தோறும், வெங்கனல் பொங்க, மதிவானில்
‘செல்வாய்’ என்னா மூவிலை வேலைச்
                               செலவிட்டாள்.*

(இலங்கைத் தேவி)

     கொல்வாம் -நாம்இவளைக் கொல்வோம்; அன்றேல் -
கொல்லப்படாமல் விட்டு விட்டால்; இ ஊர் - இந்த இலங்கை; கோள் உறும்
-
(இவனால்) அழிக்கப்படும்; எனல் கொண்டாள் - என்று மனத்தி்லே
எண்ணி; வெல்வாயேல் - என்னை வெற்றி கொள்ள முடிந்தால்; நீ வேறி -
நீ வெல்லுக; என - என்று கூறி; விழிதோறும் - கண்கள் தோறும்;
வல்வாய்தோறும் -
கொடிய வாய்கள் தோறும்; வெங்கனல் பொங்க -
கொடிய நெருப்பு மூண்டு எரிய; மூ இலை வேலை - மூன்று
தலைகளையுடைய சூலத்தை; மதி வானில் - சந்திரன் ஒளி வீசும் வானிலே;
செல்வாய் என்னா -
செல்லுவாயாக என்று கூறி; செலவிட்டாள் -
அனுமன்மேல் வீசி எறிந்தாள்.

     ‘சூலம்’ முத்தலைபெற்று, வேல்போல இருத்தலின் வேல் என்று
கூறினான்.                                             (87)

4922.

தடித்துஆம்என்னத் தன்எதிர் செல்லும்
                               தழல்வேலைக்
கடித்தான்,நாகம் விண்ணில் முரிக்கும் கலுழன்
                                போல்