பக்கம் எண் :

316சுந்தர காண்டம்

அறத்துறை - தருமமார்க்கம். இராவணனின் காமத்தினும் சீற்றம்
அதிகமாயிற்று என்பதை சீற்றத்தின் தகைமை காமத்தின் திறத்தையும் கடந்தது,
என்பதால் விளக்கப்பட்டது. உள்ளத்தில் உணர்ச்சிகள் மோதுவதை, ‘மானமும்
சினமும் தாதை மரணமும் ... ஞானமும் துயரும் தம்முள் மலைந்தன நலிந்த’
என முன்பு பேசப் பெற்றது (கம்ப. 3542) அடுத்த பாடல் இதனை விளக்கும்.
இக்கலித்துறை மா - விளம் - விளம் - விளம் - விளம் - மா என்னும் 5
சீர்களைப் பெற்று வரும். இப்பாடல்கள் இந்நூலில் 1223 முறை காட்சி
தருகின்றன (மணிமலர் 76) (137)

5206.

வளர்ந்ததாளினன்; மாதிரம் அனைத்தையும்
                                      மறைவித்து

அளந்ததோளினன்; அனல் சொரி கண்ணினன்;
                                      ‘இவளைப்
பிளந்துதின்பென்’ என்று உடன்றனன்;
                                       பெயர்ந்தனன்; பெயரான்;
கிளர்ந்தசீற்றமும், காதலும், எதிர் எதிர் கிடைப்ப.

வளர்ந்ததாளினன் - வளர்ந்த கால்களைஉடையவனாய்; மாதிரம்
அனைத்தையும் -
எல்லாத் திசைகளையும்; மறைவித்து - மறையும்படி
செய்து; அளந்த தோளினன் - அளாவிய தோள்களை உடையவனாய்;
அனல் சொரி - நெருப்பை உமிழும்; கண்ணினன் - கண்களை
உடையவனாய்; (கிளர்ந்த இராவணன்) இவளை - இந்தப் பெண்ணை; பிளந்து
தின்பென் -
பிளந்து தின்று விடுவேன்; என்று உடன்றனன் - என்று
சினந்தான்; கிளர்ந்த சீற்றமும் - (மனத்துள்) மிக்கெழுந்த கோபமும்;
காதலும்- அடங்கிய காமமும்; எதிர் எதிர் கிடைப்ப - மாறி மாறிப்
போரிட(அதனால்); பெயர்ந்தனன் பெயரான் - புறப்பட்டான்-நின்றான்
ஆனான்.

இராவணன்,கொல்ல எழுந்தான். ஆனால் அவள் மாட்டுக் கொண்ட
காதலும் சீற்றமும் எதிரெதிரே சந்தித்துப் போராடியதால் திகைத்துப் போனான்;
நின்றுவிட்டான். கிடைத்தல் - போரிடுதல். இருபடைகளும் எதிர் கிடைக்கவே
(கலிங்கத்து போர் - 3) (138)

அனுமன் சிந்தனை

5207.

அன்னகாலையில், அனுமனும், “அருந்ததிக் கற்பின்,
என்னை ஆளுடைநாயகன், தேவியை, என் முன்,