பக்கம் எண் :

342சுந்தர காண்டம்

கதையுளோர்கள் கற்புடைமடந்தையர் என்று கூட்டிக் கதையிலே பேசப்படும்
கற்புடைப் பெண்கள் என்று பொருள் கூறப்பெற்றது. கதையின் போக்கை
ஆராய்ந்து முடிவு காணுதல் முறை. நன்று - இகழ்ச்சி. அரோ - அசை.  (13)

5241.

‘ “பிறர்மனை எய்திய பெண்ணைப் பேணுதல்
திறன் அலது”என்று, உயிர்க்கு இறைவன்
                               தீர்ந்தனன்;
புறன் அலர்,அவன் உற, போது போக்கி, யான்,
அறன் அலதுஇயற்றி, வேறு என் கொண்டு
                              ஆற்றுகேன் ?

     பிறர்மனைஎய்திய - அயலவர் வீட்டைஅடைந்த; பெண்ணைப்
பேணுதல் -
பெண்ணை விரும்புதல்; திறன் அலது என்று - ஒழுக்கம் அற்ற
செயல் என்று; உயிர்க்கு இறைவன் - என் உயிரின் தலைவனான
இராமபிரான்; தீர்ந்தனன் - என்னைக் கைவிட்டு விட்டான்; புறன் - வெளி
உலகில்; அவன் அலர் உற - அந்த இராமபிரான் பழிச்சொல் பெற; அறன்
அலது இயற்றி -
இல்லற நெறிக்கு மாறுபட்டதைச் செய்து; போது போக்கி -
(இறவாமல்) காலத்தைக் கழித்து (வாழும்); யான் - நான்; வேறு - தனியாக;
என் கொண்டு - எதை ஆதாரமாகக் கொண்டு; ஆற்றுகேன் - உயிரை
வைத்திருப்பேன்.

     திறம் -ஒழுக்கம், மேன்மை, புகழ் என்னும் பொருள் தரும்.
அனைத்தும் ஈண்டு ஏற்கும். தீர்தல் - கைவிடுதல். போது போக்குதல் -
குறிக்கோளின்றி இருத்தல். ‘பொழுது போக்கிப் புறக்கணிப்பாரையும்’ என்பர்
நாவேந்தர். ஆற்றுதல் - பிழைத்தல் (உய்தல்) ஆற்றுதல், வலிதல், உய்தல்
ஆகும் (பிங்கலம் 1828)                                   (14)

5242.

‘எப் பொழுது, இப் பெரும் பழியின் எய்தினேன்,
அப் பொழுதே,உயிர் துறக்கும் ஆணையேன்;
ஒப்பு அரும் பெருமறு  உலகம் ஓத, யான்,
துப்பு அழிந்துஉய்வது, துறக்கம் துன்னவோ ?

     இப்பெரும்பழி -இந்தப்பெரிய பழியை; எப்பொழுது எய்தினேன் -
எப்போது அடைந்தேனோ; அப்பொழுது - அந்தச் சமயத்திலேயே;
உயிர்துறக்கும் - உயிரை விட்டு விடும்; ஆணையேன் - ஆன்றோர் மரபை
உடைய யான்; உலகம் - உலக மக்கள்; ஒப்பரும் பெருமறு - ஒப்பற்ற
பெரிய நிந்தையை; ஓத -