பக்கம் எண் :

402சுந்தர காண்டம்

 

‘ஐய ! நீஅளப்ப அரும் அளக்கர் நீந்தினை
எய்தியது எப்பரிசு ? இயம்புவாய் !’ என்றாள்.

     நைஉறு சிந்தையள்- நைதல்பொருந்திய உள்ளத்தை உடைய
பிராட்டி; நயன வாரியின் தொய்யல் - கண்ணீர்ப் பெருக்கின்; வெம்
சுழியிடை -
கொடிய சுழிகளுக்கு இடையே; சுழிக்கும் மேனியள் - சுழலும்
மேனியை உடையவளாய்; (அனுமனை நோக்கி) ஐய ! - என் தந்தையே; நீ
அளப்பரும் அளக்கர் -
நீ அளவிட முடியாத கடலை; நீந்தனை எய்தியது
-
கடந்து வந்தது; எப்பரிசு - எந்த விதத்தால்; இயம்புவாய் என்றாள் -
கூறுவாயாக என்று வினவினள்.

     தொய்யல் -நீர்ப்பெருக்கு (அண்ணாமலை - பதி) உயர்வு நவிற்சியால்
பிராட்டி கண்ணீர்ப் பெருக்கில் உண்டான சுழிகளில் தத்தளித்தாள். ‘கலங்கு
தெண் திரையிற்றாய கண்ணின் நீர்க்கடலில் கண்டேன்’, (கம்ப. 6041) என்று
அனுமன் பெருமான்பால் பேசுவான். கடற்சுழி பட்டவர் போல் பிராட்டி
தத்தளித்தாள் என்க.                                      (96)

5324.

‘சுருங்கு இடை ! உன் ஒரு துணைவன் தூய தாள்
ஒருங்குடைஉணர்வினோர், ஓய்வு இல் மாயையின்
பெருங் கடல்கடந்தனர் பெயரும் பெற்றிபோல்,
கருங் கடல்கடந்தனென், காலினால்’ என்றான்.

     சுருங்கிடை -சுருங்கியஇடையை உடைய தாயே; உன் ஒரு
துணைவன் - 
உன் ஒப்பற்ற நாயகனின்; தூய தாள் - தூய திருவடியில்;
ஒருங்கு அடை -
ஒன்றுபட்டு அடைந்த; உணர்வினோர் - பேரறிவு பெற்ற
ஞானிகள்; ஓய்வு இல் - ஓய்ந்து போதல் இல்லாத; மாயையின் பெருங்கடல்
-
மாயையாகிய பெருங்கடலை; கடந்தனர் - தாண்டி; பெயரும் பெற்றி
போல் -
நீங்கும் தன்மையைப் போல (அடியேன்); காலினால் - கால்களால்;
கருங்கடல் -
கரிய கடலைக்; கடந்தனென் - கடந்து வந்தேன்; என்றான் -
என்று கூறினான்.

     கால் - பிராணசக்தி என்று கூறுவாரும் உளர்.             (97) 

5325.

‘இத் துணைச் சிறியது ஓர் ஏண் இல் யாக்கையை;
தத்தினை கடல்;அது, தவத்தின் ஆயதோ ?
சித்தியின்இயன்றதோ ? செப்புவாய்’ என்றாள்-
முத்தினும்,நிலவினும், முறுவல் முற்றினாள்.