பக்கம் எண் :

சூடாமணிப் படலம்429

போது அன்றி - காகங்கள் உண்டபோதே அல்லாமல்; யான் உளென்
ஆவெனோ -
யான் உயிருடன் உள்ளவள் ஆவேனா.

    போர்க்களத்தில் வீழ்ந்த இராவணனின்  விழியைக் காகம் உண்ண
வேண்டும். அப்போதுதான் யான் உயிருடையவள் ஆவேன் என்று பேசிய
பிராட்டியின் சீற்றம் அநீதிக்கும் முறைகேட்டுக்கும் வழங்கும் எச்சரிக்கை.
வில்தொழில் கொண்ட போர் என்று மாற்றுக. ‘விற்பணி கொண்டு
அருஞ்சிறையில் மீட்ட நாள்’ (கம்ப. 5247). என்று முன்பே பேசினாள். போர்
என்றது போர்க்களத்தை. இராவணனின் விழிகளைக் காகம் உண்பதைத்
தேவர்கள் காணவேண்டும் என்று பேசினாள். தோற்ற தேவர்கள்
கொடுங்கோலால் பட்ட துன்பம் நீங்கி மகிழவேண்டும் என்பது குறிப்பு.
இராமபிரானின் வில்தொழிலைத் தேவர்கள் காண என்று உரை கூறப் பெற்றது.
என்னைப் பார்த்த உன்கண்கள் இன்னும் ஏன் தெறித்து விழாமல் இருக்கிறது.
என்று சீதை பேசுவதை வான்மீகி குறிப்பார். ‘அரக்கர் - கண்மணி காகமும்
கவர்ந்தது’ என்றும் ‘பழிப்பில் மேனியை நோக்கிய கண்களை.... காக்கைகள்
கவர்ந்து கொண்டு உண்ண’ என்றும் (கம்ப. 2962, 5404) பேசப்படும்.    (15)

5360.

‘வெற்றி நாணுடை வில்லியர் வில் தொழில்
முற்ற, நாண் இல்அரக்கியர், மூக்கொடும்
அற்ற நாணினர்ஆயின போது அன்றி,
பெற்ற நாணமும்பெற்றியது ஆகுமோ ?

     வெற்றி நாணுடைவில்லியர் - வெற்றியையும் நாணையும்பெற்ற
வில்லேந்திய இராமலக்குவர்களின்; வில்தொழில் முற்ற - வில்லாற்புரியும்
போர்த்தொழில் முதிர்ச்சியடைய (அதனால்); நாண் இல் அரக்கியர் -
நாணமற்ற அரக்கிகள்; மூக்கொடும் - மூக்குடனே; அற்ற - அறுபட்ட;
நாணினர் ஆயின போதன்றி -
மங்கல நாணை உடையவரான போதே
அல்லாமல்; பெற்ற நாணமும் - யான் பெற்ற நாணமும்; பெற்றியது
ஆகுமோ -
சிறப்புடையதாகுமோ;

     பகைவர்களின்மனைவிமார்களின் மூக்கை அறுத்தல் சிறப்புப் போலும் !
விளங்கு முடி கவித்த வீரசலாமேகன், போர்க்களத்து அஞ்சித் தன்
கார்க்களிறிழிந்து, கவ்வையுற்றோடக் காதலியொடும் தன் தவ்வையைப்
பிடித்துத் தாயை மூக்கரிய’ என்று இராசகேசரி வர்மனின் மெய்க்கீர்த்தியும்
‘நாகலை என்னும் தோகையஞ்சாயலை முகத்தொடு மூக்கு வேறாக்கி’ என்று
வீரராசேந்திர தேவனின் மெய்க்கீர்த்தியும் பேசும். பிராட்டி, சிறையில் பட்ட
அவமானங்கள் இங்ஙனம் பேசச் செய்தன.                        (16)