பக்கம் எண் :

சூடாமணிப் படலம்467

     இன்சொல்இசைப்பாள் - இனிய சொற்களைப் பேசும் பிராட்டி;
(அனுமனை நோக்கி) ஐய ! - தந்தையே; மேலோய் - மேலானவனே !;
விரைந்தனை சேறி - விரைந்து செல்வாயாக; தீயவை எல்லாம் -
எல்லாவிதமான தீமைகளையும்; வேறி - வெல்வாயாக; யான் - நான், இனி-
இப்போது; ஒன்றும் விளம்பலென் - ஒன்றையும் கூற மாட்டேன்;
கூறுகின்றன - இப்போது என்னாற் கூறப்படுபவை; முன் உற்றன குறி -
முன்பு நிகழ்ந்த அடையாளங்கள் (இ ஃது); கோமாற்கு ஏறும் - இராமபிரான்
மனத்திற் பதியும்; என்று - என்று; இவை சொல்லினள் - இவற்றைக்
கூறினாள்.

     வெல்தி என்பதுவேறி என்றும் செல்தி என்பது சேறி என்றும் வந்தன.
ஏறும் - மனத்தில் பதியும். குறி - அடையாளம். இசைப்பாள் என்பது
பிராட்டியைக் குறிக்கிறது.                                    (76)

5421.

‘நாகம்ஒன்றிய நல் வரையின்தலை, மேல்நாள்,
ஆகம் வந்து,எனை, அள் உகிர் வாளின் அளைந்த
காகம் ஒன்றைமுனிந்து, அயல் கல் எழு புல்லால்,
வேக வெம் படைவிட்டது, மெல்ல விரிப்பாய்.

     மேல்நாள் -முன்பு ஒருநாள்; நாகம் ஒன்றிய - வானம் அளாவிய;
நல்வரையின் தலை - நல்ல சித்திரகூட மலையில்; வந்து - ஓர் பக்கத்தில்
வந்து; எனை - என்னுடைய; ஆகம் - உடலை; அள் உகிர் வாளின் -
கூரிய நகமாகிய வாளினால்; அளைந்த - கிளறிய; காகம் ஒன்றை - ஒரு
காகத்தை; முனிந்து - கோபித்து; கல் அயல் - கல்லின் பக்கத்தில்; எழு
புல்லால் -
முளைத்த புல்லாலே; வேக வெம்படை - வேகமான கொடிய
பிரம்மாத்திரத்தை; விட்டது - ஏவிய செய்தியை; மெல்ல விரிப்பாய் -
மெதுவாகக் கூறுவாயாக.

     காக்கையின்கொடுஞ்செயலை இராமபிரான் அடையாளமாகக் கூறியதைப்
பெரியாழ்வார் பேசினார். அது பிராட்டி கூறியதாக அமைக்கப்பெற்றது.

 

சித்திரகூடத்து இருப்பச் சிறுகாக்கைமுலைதீண்ட
அத்திரமேகொண்டெறிய அனைத்துலகும் திரிந்தோடி
வித்தகனேஇராமாவோ நின்அபயம் என்றழைப்ப
அத்திரமேஅதன்கண்ணை அறுத்ததுமோர் அடையாளம்.

என்று பெரியாழ்வார்திருமொழி பேசும் (3.10.6)