பக்கம் எண் :

பொழில் இறுத்த படலம்481

     அனுமனால்வீசப்பட்ட மரங்கள் சில, யானையின் தந்தங்களில் தங்கின.
அவை, அந்த யானை பிடிக்குக் கொடுக்க, கையினால் இடுக்கி எடுத்து
வைத்தது போன்றிருந்தன. யானையின் எயிற்றிடை ஞால்வ; ஞால்வ, ஒத்தன.
                                                          (13)

5442.

விஞ்சை உலகத்தினும், இயக்கர் மலைமேலும்,
துஞ்சுதல் இல்வானவர் துறக்க நகரத்தும்,
பஞ்சி அடிவஞ்சியர்கள் மொய்த்தனர், பறித்தார்,
நஞ்சம்அனையானுடைய சோலையின் நறும்பூ.

     நஞ்சம்அனையானுடைய சோலையின் நறும் பூ - விடம் போன்ற
கொடிய இராவணனது அசோகவனத்து நறுமணம் மிக்க மலர்களை; விஞ்சை
உலகத்தினும் இயக்கர் மலை மேலும் -
வித்தியாதரர் உலகத்திலும்
யட்சர்கள் வாழும் மலைகளின் மீதும்; துஞ்சுதல் இல் வானவர் துறக்க
நகரத்தும் -
இறத்தல் என்பது இல்லாத தேவர்கள் வாழ்கின்ற சுவர்க்க
நகரத்திலும்; பஞ்சி அடி வஞ்சியர்கள் - (வாழ்பவர்களான) செம்பஞ்சுக்
குழம்பு ஊட்டிய பாதங்களை உடைய மகளிர்; மொய்த்தனர் பறித்தார் -
கூட்டமாய் நெருங்கி வந்து பறித்துக் கொண்டார்கள்.

     இராவணனதுபூந்தோட்டத்து மலர்களை விஞ்சை மகளிர் முதலியோர்
பறித்துக் கொள்ளும் வகையில், அனுமன் எப்புறத்தும் மரங்களை வீசி
எறிந்தனன் என்பது இதன் கருத்து.                             (14)

5443.

பொன் திணி மணிப் பரு மரன், திசைகள் போவ,
மின் திரிவஒத்தன; வெயில் கதிரும் ஒத்த;
ஒன்றினொடும்ஒன்று இடை புடைத்து உதிர, ஊழின்
தன் திரள்ஒழுக்கி, விழு தாரகையும் ஒத்த.

     திசைகள் போவ -நான்குதிசைகளிலும் செல்லும்; பொன் திணி மரன்-
பொன்னால் பதிக்கப்பெற்ற மரங்கள்; மின் திரிவ ஒத்தன -
மின்னல்கள்திரிவனவற்றை ஒத்தன; மணிப் பருமரன் - இரத்தினங்களால்
பதிக்கப் பெற்றமரங்கள்; வெயில் கதிரும் ஒத்த - சூரியனுடைய ஒளியையும்
ஒத்திருந்தன;ஒன்றினொடும் ஒன்று இடை புடைத்து உதிர - (அவ்வாறு
வீசி எறியப்பட்டமரங்கள்) இடையே ஒன்றோடு ஒன்று தாக்கப்பட்டுத் தகர்ந்து
தூளாகிக் கீழேஉதிரும்படி; ஊழின் - கற்பமுடிவில்; தன் திரள் ஒழுக்கின்
விழும்தாரகையும் ஒத்த -
கூட்டமாக விழும் நட்சத்திரங்கள் போலவும்
விளங்கின.