கேழ் இருமணியும் பொன்னும் - நல்ல நிறமுள்ள பெரிய இரத்தினங்களும், பொன்னும்; விசும்பு இருள் கிழி்த்து நீங்க - வானில் உள்ள இருளைப் பிளந்து நீங்கிட; ஊழ் இருங்கதிர்களோடும் - முறை முறையே தோன்றுகின்ற (இரத்தினம், பொன்) மிக்க கிரணங்களோடும் கூடிய; தோரணத்து உம்பர் மேலான் - அத்தோரண வாயிலின் மேல் ஏறி நின்ற அனுமன்; சூழ் இருங்கதிர்கள் எல்லாம் தோற்றிட - தன்னைச் சூழ்ந்த பெருங் கிரணங்கள் யாவும் தோன்றி விளங்க; ஆழியின் நடுவண் தோன்றும் - கடலின் நடுவில் விளங்குகின்ற; சுடரும் சோதி அருக்கனே அனையன் ஆனான் - விளங்குகின்ற பேரொளியை உடைய சூரியனை ஒத்தவன் ஆனான். தோரணத்துஉம்பர் மேலான் (அனுமன்) அருக்கன் (சூரியன்) அனையன் ஆனான். தோரணத்துக்குக் கடலும், மேலிடத்திருந்த அனுமனுக்குச் சூரியனும் உவமையாயின. தோரணம் - தோரண வாயில். அனுமனுக்குக் கதிரவனை முன்னும் (4768) உவமையாக்கினார். (16) 5566. | செல்லொடுமேகம் சிந்த, திரைக் கடல் சிலைப்புத் தீர, கல் அளைக்கிடந்த நாகம் உயிரொடு விடமும் கால, கொல் இயல்அரக்கர் நெஞ்சில் குடி புக அச்சம், வீரன் வில் என இடிக்க,விண்ணோர் நடுக்குற, வீரன் ஆர்த்தான். |
மேகம் செல்லொடுசிந்த - மேகங்கள் இடியுடன் சிதறி விழவும்; திரைக் கடல் சிலைப்பு தீர - அலைகளை உடைய கடல் தன் பேரொலி அடங்கிப் போகவும்; கல் அளைக் கிடந்த நாகம் - மலைப் பொந்துகளில் தங்கிக் கிடந்த பாம்புகள்; உயிரொடு விடமும் கால - தமது உயிரோடு நஞ்சையும் ஒன்று சேர்ந்து உமிழவும்; கொல் இயல் அரக்கர் நெஞ்சில் அச்சம் குடிபுக - பிறரைக் கொல்லும் தன்மையுள்ள அரக்கர்களது மனத்தில் பயம் வந்து புகுந்து நிலையாக நிற்கவும்; விண்ணோர் நடுக்கு உற - தேவர்கள் நடுக்கம் அடையவும்; வீரன் வில் என இடிக்க - ரகுவீரனான இராமபிரானது வில்லின் நாணொலி போல முழங்க; வீரன் ஆர்த்தான் - சிறந்த வீரனான அனுமன் கர்ச்சனை செய்தான். செல் - இடி;‘வான் முழக்குச் செல்’ (பரிபாடல் 13.44) (17) |