5610. | வழங்குதேர்களின் இடிப்பொடு வாசியின் ஆர்ப்பும், முழங்கு வெங்களிற்று அதிர்ச்சியும், மொய் கழல் ஒலியும், தழங்குபல்லியத்து அமலையும், கடையுகத்து, ஆழி முழங்கும்ஓதையின், மும் மடங்கு எழுந்தது முடுகி. |
வழங்குதேர்களின் இடிப்பொடு - விரைந்து செல்கின்றதேர்களின் ஒலியும்; வாசியின் ஆர்ப்பும் - குதிரைகளின் கனைப்பு ஒலியும்; முழங்கு வெம் களிற்று அதிர்ச்சியும் - பிளிறுகின்ற கொடிய யானைகளின் பேரொலியும்; மொய் கழல் ஒலியும் - (வீரர்கள் காலில்) கட்டிய வீரக்கழல்களின் ஒலியும்; தழங்கு பல்லியத்து அமலையும் - ஒலிக்கும் பலவாத்தியங்களின் பேரொலியும் (கூடி); கடை யுகத்து ஆழி முழங்கும் ஓதையின் - யுக முடிவுக் காலத்தில் கடல்கள் கொந்தளித்து ஒலிக்கின்ற ஓசையை விட; மும் மடங்கு முடுகி எழுந்தது - மூன்று மடங்கு அதிகமாக விரைந்து மேற்கிளம்பியது. ஒலி, தழங்கல்,அமலை, ஓதை என்பன ஒரு பொருள் குறிக்கும் பல சொற்கள். ‘ஆறுபாய் அரவம்’, என்ற நாட்டுப் படலப் பாடலில் (கம்ப.34) ஒலி குறித்துப் பல சொற்கள் ஒரு பொருள் குறித்து வந்தன; ஒப்பிட்டுச் சுவைக்கத் தக்கன. (10) 5611. | ஆழித்தேர்த் தொகை ஐம்பதினாயிரம்; அஃதே சூழிப்பூட்கைக்குத் தொகை; அவற்று இரட்டியின் தொகைய, ஊழிக் காற்றுஅன்ன புரவி; மற்று அவற்றினுக்கு இரட்டி, பாழித் தோள்நெடும் படைக்கலப் பதாதியின் பகுதி. |
ஆழித் தேர்த்தொகை ஐம்பதினாயிரம் - சக்கரங்களைக் கொண்ட தேர்களின் கணக்கு ஐம்பதினாயிரம் என்னும் அளவினதாம்; சூழிப் பூட்கைக்குத் தொகை அஃதே - முகபடாம் அணிந்த யானைகளின் தொகையும் மேலே கூறிய தேர்களின் அளவேயாகும்; ஊழிக் காற்று அன்ன புரவி - யுகாந்த காலத்தில் தோன்றுகின்ற பெருங்காற்றுப் போல வேகமாகச் செல்கின்ற குதிரைகள்; அவற்று இரட்டியின் தொகைய - அந்தத் தேர்ப்படை, யானைப் படைகளைவிட இருமடங்கு தொகை உடையன; பாழித் தோள் நெடும் படைக்கலப் பதாதியின் பகுதி - பெரிய |