பக்கம் எண் :

600சுந்தர காண்டம்

     ஊக்கியபடைகளும் - அரக்கர்கள் தன்மீது செலுத்திய ஆயுதங்களும்;
உருத்த வீரரும் - கோபித்து வந்த வீரர்களும்; தாக்கிய பரிகளும் - வந்து
மோதிய குதிரைகளும்; தடுத்த தேர்களும் - தன்னைத் தடுத்து நின்ற
தேர்களும்; மேக்கு உயர் கொடி உடை - மேலே உயர்ந்த கொடிகளைக்
கொண்ட; மேக மாலை போல் நூக்கிய கரிகளும் - மேகங்களின் வரிசை
போன்றனவுமான (தன்மீது) செலுத்தப்பட்ட யானைகளும்; புரள நூக்கினான் -
(மண் மீது விழுந்து) புரண்டழியும் படி (அனுமன் எழுவைக் கொண்டு)
கொன்றான்.

     அனுமன், தன்கையில் ஏந்திய எழுவைக்கொண்டு (இரும்புத் தூண்)
எதிரிகளின் ஆயுதம் முதலியவற்றை அழித்தது பற்றிக் கூறப்பட்டது.    (33)

5634.

வார் மதக்கரிகளின் கோடு வாங்கி, மாத்
தேர் படப்புடைக்கும்; அத் தேரின் சில்லியால்,
வீரரை உருட்டும்;அவ் வீரர் வாளினால்,
தாருடைப்புரவியைத் துணியத் தாக்குமால்.

     வார் மதக்கரிகளின் - நீண்ட மத யானைகளின்;கோடு வாங்கி -
கொம்புகளை முறித்தெடுத்து; மாத்தேர் படப்புடைக்கும் - பெரிய தேர்கள்
அழிய அடிப்பான்; அத்தேரின் சில்லியால் வீரரை உருட்டும் -
அழிந்த தேர்களின் சக்கரங்களைக் கொண்டு, போர் வீரர்களை உருண்டு
விழச் செய்வான்; அவ்வீரர் வாளினால் - உருண்டு வீழ்ந்த அரக்கவீரரது
கைவாள்களைக் கொண்டு; தார் உடைப் புரவியை துணியத்தாக்கும் -
கிண்கிணி மாலை பூண்ட குதிரைகளைத் துணிபட்டு விழும்படி வெட்டுவான்.

     அனுமன், தான்அழித்த பொருள்களையே ஆயுதங்களாகக் கொண்டு
அப்படைகளைக் கொன்றான் என்பதாம். அனுமன் இதேபோலப் போர்
செய்தை 5579 ஆம் பாடலிலும், அடுத்த 5635ஆம் பாடலிலும் காணலாம்.
                                                          (34)

5635.

இரண்டுதேர் இரண்டு கைத்தலத்தும் ஏந்தி, வேறு
இரண்டு மால்யானை பட்டு உருள, எற்றுமால்;
இரண்டு மால்யானை கை இரண்டின் ஏந்தி, வேறு
இரண்டு பாலினும்வரும் பரியை எற்றுமால்.