அந்தப் பஞ்சசேனாபதிகளை அழிக்கக் கருதிய அனுமன், அவர்களுள் ஒருவனது தேரின் விசையந்திரத்தைச் சிதைத்தான் என்பதாம். (49) | 5650. | உற்று உறுதேர் சிதையாமுன் உயர்ந்தான், முற்றின வீரனை,வானில் முனிந்தான்; பொன் திரள்நீள் எழு ஒன்று பொறுத்தான், எற்றினன்; அஃதுஅவன் வில்லினில் ஏற்றான். |
உற்று உறு தேர்சிதையா முன் - (பொறி) பொருந்தியஅத்தேர் அழிவதற்கு முன்னமே; உயர்ந்தான் - அவரக்கன் அத்தேரினின்றும் உயர்ந்து எழுந்தான்; முற்றின வீரனை - அவன் அங்கும் தன்னை மேலெழாதபடி முற்றிக் கொண்ட வீரனாகிய அனுமனை; வானில் முனிந்தான் - ஆகாயத்திலிருந்தபடியே எதிர்த்தான்; பொன்திரள் நீள் மழு ஒன்று பொறுத்தான் - (அவனை) அனுமன், கரும் பொன்னால் திரட்டப்பட்ட நீண்ட மழு ஒன்றை தாங்கியவனாய்; எற்றினன் - தாக்கியடித்தான்; அஃது - அந்த இரும்புத் தூணை; அவன் வில்லினின் ஏற்றான் - அந்த அரக்கன் தனது வில்லினால் தன் மேல் விழாதபடி தாங்கித் தடுத்தான். (50) | 5651. | முறிந்ததுமூரி வில்; அம் முறியேகொடு எறிந்த அரக்கன், ஓர் வெற்பை எடுத்தான்; அறிந்தமனத்தவன், அவ் எழுவே கொடு எறிந்த அரக்கனைஇன் உயிர் உண்டான். |
மூரிவில்முறிந்தது - (அந்த அரக்கனுடைய)வலிய வில் முறிந்து போயிற்று; அம் முறியே கொடு - அந்த வில்லின் முறிந்த துண்டையே கையில் கொண்டு; எறிந்த அரக்கன் - அனுமன் மீது வீசி எறிந்த அந்த அரக்கன்; ஓர் வெற்பை எடுத்தான் - மீண்டும் ஒரு மலையை அனுமன் மீது எறியத் தூக்கினான்; அறிந்த மனத்தவன் - அரக்கனின் கருத்தை அறிந்த மனத்தவனாகிய அந்த அனுமன்; அவ் எழுவே கொடு - (தனது கையில் கொண்டிருந்த) அந்த இரும்புத் தூணைக் கொண்டே; எறிந்த அரக்கனை - தன்மீது வில் முறிகொண்டு எறிந்த அரக்கனுடைய; இன் உயிர் உண்டான் - இனிய உயிரை அழித்தான். |