பக்கம் எண் :

அக்ககுமாரன் வதைப் படலம்643

5701.

தேரில்சென்று, எதிர் கோல் கொள்வான் உயிர்
     தின்றான்;அப் பொரு செறி திண் தேர்,
பாரில் சென்றது;பரி பட்டன; அவன்
     வரி வில்சிந்திய பகழிக் கோல்,
மார்பில்சென்றன சில; பொன் தோளிடை
     மறைவுற்றனசில; அறவோனும்,
நேரில் சென்று,அவன் வயிரக் குனி சிலை
     பற்றிக்கொண்டு, எதிர் உற நின்றான்.

     தேரில் சென்று -(பாய்ந்தஅனுமன்) தேரிலே நின்று; எதிர் கோல்
கொள்வான் உயிர் தின்றான் -
எதிரேயுள்ள உளவுகோலைக் கையில்
கொண்டுள்ள சாரதியின் உயிரை அழித்தான்; அப் பொரு செறிதிண் தேர்
பாரில் சென்றது -
(பின்னும் அனுமன் தனது கையால் நொறுக்கியதால்) அந்த
ஒப்பற்ற கெட்டியான வலிய தேர், (சின்னா பின்னப்பட்டு) தரையில் விழுந்து
விட்டது; பரிபட்டன - குதிரைகள் இறந்தன; அவன் வரிவில் சிந்தியு
பகழிக்கோல் சில -
அந்த அக்ககுமாரன், தன் கட்டுகள் அமைந்த
வில்லினால்பொழிந்த அம்புகளில் சில; மார்பில் சென்றன - அனுமன்
மார்பில்பாய்ந்தன; சில பொன் தோளிடை மறைவுற்றன - மற்றும் சில
அம்புகள்அனுமனது பொன்போன்ற தோளின் மேல் பாய்ந்து மறைவுற்றன;
அறவோனும் -
அறவோனாகிய அனுமனும்; நேரில் சென்று - நேராகப்
போய் நின்று; அவன் வயிரக் குனி சிலை பற்றிக்கொண்டு -
அக்ககுமாரனது வலிய வளைந்த வில்லைப் பிடுங்கிக் கொண்டு; எதிர் உற
நின்றான் -
அவன் எதிரிலே நின்றான்.

     பகழிக் கோல் -அம்பு. அறவன் என முன்னரும் (5512) அனுமன்
குறிக்கப்பட்டான்.                                              (34)

5702.

ஒரு கையால்அவன் வயிரத் திண் சிலை
     உற்றுப்பற்றலும், உரவோனும்,
இரு கையால் இவன்வலியாமுன்னம், அது
     இற்றுஓடியது; இவர் பொன் தோளின்,
சுரிகையால் அவன்உருவிக் குத்தலும்,
     அதனை,சொல் கொடு வரு தூதன்,
பொரு கையால்இடை பிதிர்வித்தான், முறி
     பொறி ஓடும்படி பறியாவே.