ஐவர் - அழிவில்லாத பஞ்சசேனாபதிகளும்; என்று இப்பைங்கழல் அரக்கரோடும் - என்று சொல்லப்படுகின்ற இந்தப் பசுமையான வீரக்கழல் அணிந்த அரக்க வீரர்களுடன்; உடன்சென்ற பகுதிச்சேனை - கூடிச் சென்ற சேனையின் பாகங்களில்; இங்கு ஒரு பேரும் மீண்டார் இல்லையேல் - ஒருவரேனும் இங்குத் திரும்பி வந்தார் இல்லை என்றால்; குரங்கு அது ஆமே ! - அது குரங்கு என்று சொல்லத்தக்கதா ?; சங்கரன், அயன், மால் என்பார் தாம் - சிவபிரான், பிரமன், திருமால் என்று சொல்லப்படுகின்ற மும்மூர்த்திகள் தாம்; எனும் தகையது - என்று கருதத்தகுவதாகும். போருக்குச்சென்றவர் ஒருவரும் மீளவில்லை என்றால் எதிர்த்துப் போர் செய்வது குரங்கா ? அன்று; மும்மூர்த்திகளின் சொரூபம் என்று கருத வேண்டும் என்பது கருத்து. (10) 5727. | ‘திக்கயவலியும், மேல்நாள் திரிபுரம் தீயச் செற்ற முக்கணன்கைலையோடும் உலகு ஒரு மூன்றும் வென்றாய்; “அக்கனைக்கொன்று நின்ற குரங்கினை, ஆற்றல் காண்டி; புக்கு இனிவென்றும்” என்றால், புலம்பு அன்றி, புலமைத்து ஆமோ ? |
திக்கய வலியும்- எட்டுத்திக்கு யானைகளின் வலிமையையும்; மேல்நாள் திரிபுரம் தீயச் செற்ற முக்கணான் கயிலையோடும் - முன்னொரு காலத்தில் முப்புரத்தையும் எரியும்படி அழித்திட்ட சிவபிரானது கைலை மலையையும்; உலகு ஒரு மூன்றும் வென்றாய் - மூன்று உலகங்களையும் வென்றவனாகிய நீ (இப்போது); அக்கனைக் கொன்று நின்ற குரங்கினை - அக்ககுமாரனைக் கொன்று (தான் உயிரோடு) நின்ற இந்தக் குரங்கை; ஆற்றல் காண்டி - அதன் ஆற்றல் காண்பிக்குமாறு பார்த்துக் கொண்டிருக்கிறாய் (விளையாடவிட்டு வேடிக்கை பார்க்கிறாய்); இனிப்புக்கு வென்றும் என்றால் - இவ்வளவு அழிவுக்குப் பின் நாம் போர்க்களம் சென்று அதனை வெல்வோம் என்று சொன்னால்; புலம்பு அன்றி - அது வீண்பிதற்றலே அல்லாமல்; புலமைத்து ஆமோ ? - அறிவுடைய செயலாகுமோ (ஆகாது என்றபடி). |