பக்கம் எண் :

666சுந்தர காண்டம்

5734.

தீ எழுபொன்னின் சின்னம் மேவி வீழ் அரக்கர்
                                   சேர
வாய்களில் ஊத,மண்ணும் வானமும் மறுகிச்
                                   சோர்ந்த;
‘ஆயது முடிவுகாலம்; கிளர்ந்தனர் அரக்கர்’ என்று
வாய்களின் பேசிவானோர் மண்டினர், மலைதல்
                                   நோக்கி.*

     வீழ் அரக்கர் -போரைவிரும்பிய அரக்கர்கள்; தீ எழு பொன்னின்
சின்னம் -
நெருப்பிலிருந்து காய்ச்சி எழுப்பிய பொன்னால் ஆகிய ஊது
கொம்புகளை; மேவி - விரும்பி; சேர வாய்களில் ஊத - ஒன்றாகப் பலரும்
வாய்களில் வைத்து ஊத (அவ் ஒலி கேட்டு); மண்ணும் வானமும் மறுகிச்
சோர்ந்த -
மண்ணுலக மக்களும், விண்ணுலகத்தவரும் கலக்கமுற்றுச்
சோர்ந்தனர்; வானோர் - தேவர்கள்; அரக்கர் கிளர்ந்தனர் - அரக்கர்
கிளர்ச்சி பெற்றுவிட்டார்கள்; முடிவுகாலம் ஆயது - உலக அழிவுக்காலம்
நெருங்கியது; என்று வாய்களின் பேசி - என்று தம் வாய்களினால்
பேசிக்கொண்டு; மலைதல் நோக்கி மண்டினர் - போரிடுதலைப் பார்க்க
விரும்பி நெருங்கினார்கள்.

     தீ எழு பொன் -‘சுடச் சுடரும் பொன்’ என்பதை (குறள் 267)
நினைப்பூட்டும். பேசி என்றாலே அமையவும் ‘வாய்களின்’ என்றது அரக்கரால்
துன்புறும் தேவர் அரக்கர்களைப் பற்றியே எப்போதும் பேசும் வாயை
உடையவர் என்று அவ்வாயின் இழிவினைச் சிறப்பித்ததாம்.            (18)

5735.

அரம்தெறும் அயிலின் காடும், அழல் உமிழ் குந்தக்
                           காடும்,
சரம் தருசிலையின் காடும், தானவர் கடலும்,
                           இன்ன
நிரந்தரம் சங்குதாரை நில மகள் முதுகை ஆற்றாள்;
‘புரந்தரசித்துவந்தான்’ என்றன, பொன்னின்
                           சின்னம்.*

     அரம் தெறும்அயிலின் காடும் - அரத்தால் தீட்டிக்கூர்மை
செய்யப்பெற்ற வேற்படைத் தொகுதியும்; அழல் உமிழ் குந்தக்காடும் -
நெருப்பைக் கக்குகின்ற குந்தப் (ஈட்டி) படையின் மிகுதியும்; கரம் தரு
சிலையின் காடும் -
அம்புகளை எய்கின்ற