பக்கம் எண் :

பாசப் படலம்671

வீரர்கள் - உரிமைத் தொழில்செய்யும் வீரர்கள்; ஐ இரு வெள்ளம் - பத்து
வெள்ளம் ஆகும்.

    ‘கா இல்அரக்கர்’ என்றது இவ்வரக்கர் சீறினால் மற்றவர்க்குக் காப்பு
இல்லை என்றபடியாம். அகம்படி வீரர் - போர் செய்வோர்க்கு வேண்டும்
உதவிகளைச் செய்யும் வீரர் என்பதாம் - இவர்களே பத்து வெள்ளமாயின்
போர் புரிவோர் புதுயுகம் வந்தது போன்ற கணக்கினர் என்றது பொருத்தமே.
                                                          (27)

5744.

வெள்ளம் ஓர் நூறுடை விற் படை என்பார்;
துள்ளிய வாட்படை சொல்லிட ஒண்ணா,
பொள்ளல் தரும் கரப் பூட்கையும் அஃதே;-
கள்ள அரக்கனைச்சுற்றினர் காப்பார்.*

     கள்ள அரக்கனைச்சுற்றினர் காப்பார் - வஞ்சம் நிரம்பிய
இந்திரசித்துவைச் சுற்றிப் பாதுகாப்பவர்; விற்படை ஓர் நூறுடை வெள்ளம்
என்பார் -
வில்லேந்திய படைஓர் ஒரு நூறு வெள்ளம் எனும் கணக்கினர்
ஆவர்; துள்ளிய வாட்படை சொல்லிட ஒண்ணா - துள்ளிப் பாயும் வாள்
ஏந்திய படைஞர் கணக்கிட முடியாதவராம்; பொள்ளல் தரும் கரப்
பூட்கையும் அஃது -
துவாரம் உடைய துதிக்கையை உடைய யானைப்
படையும் அதுபோலவே சொல்ல இயலாத அளவினவாகும்.

    முகத்திற்பூட்டியது போன்ற கையை உடைமையால் யானைக்குப் பூட்கை
என்பது பெயர். ‘ஏ’ காரம் அசை.                                 (28)

5745.

ஆய பெரும்படை செல்வது கண்டு
மாயம் மிகும்திறல் வானர வீரன்,
நாயகனைத் திசைநோக்கி வணங்கி,
மேயது ஓர்இன்பம் விளங்கிட நின்றான்.*

     ஆய பெரும்படைசெல்வது கண்டு - அத்தகைய இந்திரசித்துவின்
பெரியபடை செல்வதைப் பார்த்து; மாயம் மிகும் திறல் வானர வீரன் -
பகைவர்க்கு மயக்கம் உண்டாக்கத்தக்க மிகுந்த வலி படைத்த குரங்கு வீரன்
ஆய அனுமன்; நாயகரைத் திசை நோக்கி வணங்கி - இராமபிரானை
(அவன் உள்ள) வடதிசை நோக்கி வணங்கி; மேயது ஓர் இன்பம் விளங்கிட
நின்றான் -
தன்னிடத்தில் உண்டாகிய மகிழ்ச்சி முகத்தில் விளங்கித் தோன்ற
நின்றான்.