நீண்டவீரனும் - அவ்வாறு பேருருக் கொண்ட வீரனான அனுமனும்; நெடும் தடம் கைகளை நீட்டி - நீண்ட பெரிய தனது கைகளை எதிரிலே நீளச் செலுத்தி; எய்தன ஈண்டு வெம்சரம் எய்திடா வண்ணம் - (இந்திரசித்தால்) எய்யப் பட்டு விரைந்து வருகின்ற கொடிய அம்புகள் தன்னுடம்பில் படாதபடி; மீண்டு போய் விழ வீசி - திரும்பி, அவன் மேல் போய் விழுமாறு வீசி எறிந்து விட்டு; அங்கு அவன் மிடல் தடம் தேர் பூண் பேயொடு - அங்கே, அவனது வலிமையுள்ள பெரிய தேரில் கட்டிய பேய்களையும்; சாரதி தரைபட புடைத்தான் - தேர்ப்பாகனையும் கீழே விழுந்து இறக்குமாறு அடித்தான். (68) | 5785. | ஊழிக்காற்று அன்ன ஒரு பரித் தேர் அவண் உதவ, பாழித்தோளவன், அத் தடந் தேர்மிசைப் பாய்ந்தான்; ஆழிப் பல் படைஅனையன, அளப்ப அருஞ் சரத்தால், வாழிப் போர் வலி மாருதி மேனியை மறைத்தான். |
அவண் - அந்நிலையில்;ஊழிக் காற்று அன்ன ஒரு பரி தேர் உதவ - ஊழிக்காலத்தில் வீசும் பெருங்காற்றுப் போல (வேகமாகச் செல்லும்) குதிரைகள் பூட்டிய ஒரு தேரை (வேறு ஒரு சாரதி) கொண்டு வந்து தர; பாழி தோளவன் - பருத்த தோள்களை உடைய அந்த இந்திரசித்து; அத்தடம் தேர் மிசை பாய்ந்தான் - அந்தத் தேரின் மீது பாய்ந்து ஏறி; பல் ஆழி படை அனையன அளப்ப அரும் சரத்தால் - பல சக்கராயுதம் போன்ற அளவிட்டுச் சொல்ல முடியாத அம்புகளால்; வாழி போர் வலி மாருதி மேனியை மறைத்தான் - நீடுழி வாழ்பவனும், போர் வலிமையிற் சிறந்தவனுமான அனுமனது திரு மேனியை மூடி மறைத்துவிட்டான். அனுமனது உடம்புமறையும் படி மிகுதியாக அம்புகளை இந்திரசித்து எய்தான் என்பதாம். பாழி - பெருமையும் ஆம்; ஆழி - சக்கராயுதம்; கடலும் ஆம். (69) | 5786. | உற்றவாளிகள் உரத்து அடங்கின உக உதறா, கொற்ற மாருதி, மற்றவன் தேர்மிசைக் குதித்து, பற்றி வன்கையால், பறித்து எழுந்து, உலகு எலாம் பலகால் முற்றி வென்றபோர் மூரி வெஞ் சிலையினை, முறித்தான். |
|