வட்டமான மதிலையும்;கொற்ற வாயிலும் - வெற்றியை அறிவிக்கும் கோபுர வாயிலையும் ; மணியின் செய்த வெண்தள - மணிகள் பதிக்கப் பெற்ற வெண்மையான; களப மாட வீதியும் - சுண்ணம் பூசப்பெற்ற, மாளிகைகளை உடைய வீதியையும்; பிறவும் எல்லாம் - (கூறப்பெறாது விடுத்த) பிறவற்றையும்; கண்டணன் - பார்த்தான்; அண்டமும் - வானத்தின் உச்சியும்; திசைகள் எட்டும் - எட்டுத் திக்குகளும்; அதிர - எதிரொலிக்க; தோள் கொட்டி ஆர்த்தான் - தோள்களைப் புடைத்து ஆரவாரித்தான். அனுமன் இலங்கைமூதூரின் காவற்சோலை முதலியவற்றைப் பார்த்து மகிழ்ச்சியால் தோள்களைப் புடைத்து ஆரவாரித்தான். இலங்கை மூதூர் -மூது இலங்கை ஊர். நாஞ்சில் - மதில் மேல் குருவித் தலைபோல் அமைக்கப் பெற்ற உறுப்பு. சிலப்பதிகாரத்தில் அடைக்கலக் காதையில் காண்க (217) அண்டம் - பிரபஞ்ச உருண்டை என்றும் கூறலாம். திசைகள் கூறப் பெற்றமையால் (அண்டம் என்பதற்கு) வான்முகடு கூறப் பெற்றது. ‘அண்டமுற நிமிர்ந்தாடும் அப்பன்’ என்பர் அம்மையார் (மூத்த திருப்பதிகம்). அதிர - எதிரொலிக்க. வீரர்கள் உற்சாகத்தால் தோள் கொட்டுவர். ‘தன் தோள் கொட்டித் தடவரையை... எடுத்தான்’ (நாவரசர் - ஆராத இன்னமுதை 10) கண்டனென்... பிறவும் என்னா... ஆர்த்தான் என்னும் பாடம் கொண்டு மதில் முதலானவற்றைப் பார்த்தேன் என்று கூறி ஆரவாரித்தான் என்று பொருள் கூறுவாரும் உளர். தளம் - சுண்ணச் சாந்து. தாழியும் சாந்தும் தளம் ஆகும். (பிங் 3615) கடிபொழில் என்பது காவற்காட்டை. இது காட்டரண். கொற்றவாயில் - கோபுரவாசல். நம் கோன் கொற்றவாயில் (சிலம்பு 20-16) களப மாட வீதி - யானை செல்லும் வீதி என்றும் கூறலாம். (2) மகேந்திரமலையில் நிகழ்ந்த குழப்பம் 4743. | வன்தந்தவரிகொள் நாகம், வயங்குஅழல் உமிழும் வாய, பொன்தந்தமுழைகள்தோறும் புறத்து உராய்ப் புரண்டு போவ - நின்று, அந்தம்இல்லான் ஊன்ற - நெரிந்துகீழ் அழுந்தும் நீலக் குன்றம் தன்வயிறு கீறிப் பிதுங்கினகுடர்கள் மான. |
5 |