சாய்ந்த மாருதி- கீழேவிழுந்த அனுமன்; சதுமுகன் படை எனும் தன்மை ஆய்ந்து - (தன் மேற் செலுத்தியது) பிரம்மாத்திரம் என்னும் உண்மையை உணர்ந்தறிந்து; இதன் ஆணையை அவமதித்து அகறல் ஏய்ந்தது அன்று என எண்ணினன் - இதன் கட்டளையை இகழ்ந்து இதனைவிட்டு நீங்குதல் தக்கதன்று எனக் கருதியவனாய்; கண் முகிழ்த்து இருந்தான் - கண்ணை மூடிக் கொண்டு அதற்குக் கட்டுப்பட்டவன் போல் இருந்தான்; அரக்கன் ‘இவன் வலி ஓய்ந்தது ஆம்’ என - அரக்கனாகிய இந்திரசித்து, இவனுடையவலிமை ஒழிந்துவிட்டது என்று எண்ணி; வந்துற்றான் - அனுமன் அருகில் வந்தடைந்தான். வர பலத்தால்பிரம்மாத்திரத்தையும் கடக்கும் ஆற்றல் உள்ளவனாயினும், அனுமன் பிரம்ம தேவனைப் பெருமைப் படுத்த வேண்டும் என்ற பெருந்தகையினால், அதற்குக் கட்டுப்பட்டிருந்தான் என்க. (84) அரக்கர் அனுமனைச்சூழ்ந்து ஆரவாரித்தல் | 5801. | உற்றகாலையின், உயிர்கொடு திசைதொறும் ஒதுங்கி அற்றம்நோக்கினர் நிற்கின்ற வாள் எயிற்று அரக்கர்- சுற்றும் வந்து,உடல் சுற்றிய தொளை எயிற்று அரவைப் பற்றிஈர்த்தனர்; ஆர்த்தனர்; தெழித்தனர்-பலரால். |
உற்ற காலையின்- (இவ்வாறு இந்திரசித்து அனுமன் அருகில் வந்து) சேர்ந்தபோது; உயிர் கொடு - முன் அனுமனுடன் போர் செய்ய அஞ்சித்தம் உயிரைக் காப்பாற்றிக் கொண்டு; திசைதொறும் ஒதுங்கி - நான்கு திசைகளிலும் ஓடி மறைந்து; அற்றம் நோக்கினர் - (அனுமனுக்குச்) சோர்வு நேரும் சமயத்தை எதிர் பார்த்து; நிற்கின்ற வாள் எயிற்று அரக்கர்பலர் - நின்ற, ஒளி தங்கிய பற்களையுடைய அரக்கர்களில் பலர்; சுற்றும் வந்து - அனுமனை நாற்புறங்களிலும் சூழ்ந்து வந்து; உடல் சுற்றிய தொளை எயிற்று அரவை - அனுமன் உடம்பைச் சுற்றிக் கொண்டிருந்த, துவாரமுள்ள விஷப்பற்களை உடைய அரவ வடிவான அந்தப் பிரம்மாத்திரத்தை; பற்றி ஈர்த்தனர் தெழித்தனர் - பிடித்து இழுத்து ஆர்த்தனர் பெருமுழக்கமிட்டு அனுமனை அதட்டினார்கள். (85) |