பக்கம் எண் :

720சுந்தர காண்டம்

5831.

கேட்டலும்-கிளர் சுடர் கெட்ட வான் என
ஈட்டு இருள்விழுங்கிய மார்பின், யானையின்
கோட்டு எதிர்பொருத பேர் ஆரம் கொண்டு, எதிர்
நீட்டினன்-உவகையின் நிமிர்ந்த நெஞ்சினான்.

     கேட்டலும் -அதனைக்கேட்டவுடன்; உவகையின் நிமிர்ந்த
நெஞ்சினான் -
மகிழ்ச்சியால் ஓங்கிய மனமுடைய இராவணன்; கிளரீ சுடர்
கெட்ட வான் என -
விளங்குகின்ற (இரவில்) சந்திரன் ஒழியப் பெற்ற
ஆகாயம் போல; ஈட்டு இருள் விழுங்கிய - செறிதலுள்ள இருளினால்
விழுங்கப்பட்ட (மிகக்கறுத்த); மார்பின் - தன் மார்பினிடத்து; யானையின்
கோடு எதிர் பொரு -
(முன்) திக்கஜங்களின் தந்தங்களோடு புரண்டு மோதிக்
கொண்டிருந்த; பேர் ஆரம் கொண்டு எதிர் நீட்டினான் - பெரிய
முத்துமாலையைக் கழற்றிக் கொண்டு (நற்செய்தி சொன்ன தூதர்க்கு)
வெகுமதியாகக் கொடுத்தான்.

     தூதுவர் கூறியநற்செய்தி இராவணனை எவ்வளவு மகிழ்வித்துள்ளது
என்பதை, அவன் தூதுவர்க்குக் கொடுத்த முத்து மாலைப் பரிசு
தெரிவிக்கின்றது.                                            (27)
 

                  குரங்கைக்கொல்லாது கொணர, இராவணன் பணித்தல். 

5832.

எல்லை இல்உவகையால் இவர்ந்த தோளினன்,
புல்லுற மலர்ந்தகண் குமுதப் பூவினன்,
‘ஓல்லையின் ஓடி,நீர் உரைத்து, என் ஆணையால்,
“கொல்லலை தருக”எனக் கூறுவீர்’ என்றான்.

     எல்லை இல்உவகையால் - அளவற்றமகிழ்ச்சியினால்; இவர்ந்த
தோளினன் -
பூரித்த தோள்களை உடையவனும்; புல்லுற மலர்ந்தகண்
குமுதப் பூவினன் -
தழுவுமாறு நன்று மலர்ந்த கண்களாகிய செவ்வாம்பல்
மலர்களை உடையவனுமாகிய இராவணன்; நீர் ஒல்லையின் ஓடி - நீங்கள்
விரைவாக ஓடிச் சென்று; என் ஆணையால் உரைத்து - எனது
கட்டளையாகச் சொல்லி; ‘கொல்லலை தருக’ என கூறுவீர் என்றான் -
‘அந்தக் குரங்கைக் கொல்லாது உயிருடன் கொண்டு இங்குத்தருக’ என்று
இந்திரசித்துவிடம் சொல்லுவீர் என்று கூறினான்,                   (28)