பக்கம் எண் :

பிணி வீட்டு படலம்721

5833.

அவ் உரை,தூதரும், ஆணையால், வரும்
தெவ் உரைநீக்கினான் அறியச் செப்பினார்;
இவ் உரைநிகழ்வுழி, இருந்த சீதையாம்
வெவ் உரைநீங்கினாள் நிலை விளம்புவாம்;

     தூதரும் - தூதுவர்களும்;அவ் உரை - அந்தச் சொல்லை;
ஆணையால் -
இராவணனது கட்டளைப்படி; வரும் - தம் எதிரே
அனுமனைப் பற்றிக் கொண்டு வரும்; தெவ் உரை நீக்கினான் அறிய
செப்பினார் -
பகைவர் என்ற சொல்லையே நீக்கிய இந்திரசித்து தெரிந்து
கொள்ளும்படிக் கூறினார்கள்; இவ் உரை நிகழ்வுழி - இந்த வார்த்தை
எங்கும் பரவிய போது; இருந்த சீதையாம் - அசோகவனத்தில் காவலில்
இருந்த சீதையாகிய; வெவ் உரை நீங்கினாள் நிலை விளம்புவாம் -
கொடியபழிச் சொல்லின் நீங்கியவளது நிலையைக் கூறுவோம்.

     இது கவிக்கூற்று.தெவ் உரை நீக்கினான்; பகைவர்களே இல்லாதபடி
செய்தவன் என்பது கருத்து, வெவ் உரை நீங்குதலாவது பழி நாணித் தகை
சான்ற சொற்காத்தலாகும்.                                     (29)

அனுமனுக்கு உற்றதைத்திரிசடை சொல்ல, சீதை புலம்புதல்

5834.

‘இறுத்தனன்கடி பொழில், எண்ணிலோர் பட
ஒறுத்தனன்’ என்றுகொண்டு உவக்கின்றாள், உயிர்
வெறுத்தனள்சோர்வுற, வீரற்கு உற்றதை,
கறுத்தல் இல்சிந்தையாள் கவன்று கூறினாள்.

     கடிபொழில்இறுத்தனன் - மணம் மிக்கஅசோகவனத்தை
ஒடித்தழித்தான்; எண் இலோர் பட ஒறுத்தனன் - அளவிறந்த அரக்கர்கள்
அழியுமாறு கொன்றிட்டான்;
என்று கொண்டு -என்றுஅவ்வப்போது
சொல்லக் கேட்டுணர்ந்து;உவக்கின்றாள் - மகிழ்கின்றவளான
சீதாபிராட்டிக்கு; கறுத்தல் இல்சிந்தையாள் - களங்கமில்லாத மனத்தை
உடையவளான திரிசடை என்பவள்;வீரற்கு உற்றதை - மகாவீரனான
அனுமனுக்கு ஏற்பட்ட துன்ப நிலையை;உயிர் வெறுத்தனள் சோர்வுற -
தன் உயிரை வைத்துக் கொண்டு வாழ்வதில்வெறுப்புற்றவளாய், தளர்ச்சி
அடையும்படி; கவன்று கூறினாள் -மனக்கவலையுடன் சொன்னாள்.