| 5973. | மூளும் வெம்புகை விழுங்கலின், சுற்றுற முழு நீர் மாளும் வண்ணம்,மா மலை நெடுந் தலைதொறும் மயங்கிப் பூளை வீய்ந்தன்னபோவன, புணரியில் புனல் மீன் மீள, யாவையும்தெரிந்தில, முகில் கணம் விசைப்ப.+ |
புணரியின் புனல்மீன் யாவையும் மீள - கடல் நீரினிடத்துள்ள மீனினம் யாவையும் இல்லையாகும்படி; மூளும் வெம்புகை - மூண்டெழுந்த வெவ்விய நெருப்புப் புகை; சுற்று உற முழு நீர் மாளும் வண்ணம் விழுங்கலின் - சுற்றியுள்ள நீர் முழுவதையும் குடித்துவிட்டமையால்; தெரிந்தில முகில் கணம் விசைப்ப - இது தெரியாத மேகக் கூட்டங்கள் நீர் முகக்க விரைந்து செல்வனவாய்; மாமலை நெடும் தலை தொறும் மயங்கி - பெரிய மலைகளின் உயர்ந்த இடங்களில் எல்லாம் மோதுண்டு; பூனை வீய்ந்தன்ன போவன - பூளைப் பூ சிதறுவது போல சிதறிப் போயின. புகை, கடலில்உள்ள மீனினம் மாயும்படி, நீர் முழுதையும் குடித்துவிட்டது. வழக்கமாக நீர் முகக்க வரும் மேகங்கள், அது தெரியாமல் சென்று, மலை உச்சியில் மோதுண்டு சிதறிப் போயின என்பதாம். மீள - இல்லையாக. (31) | 5974. | மிக்க வெம் புகை விழுங்கலின், வெள்ளியங்கிரியும், ஒக்க,வெற்பினோடு; அன்னமும் காக்கையின் உருவ; பக்க வேலையின்படியது, பாற்கடல்; முடிவில் திக்கயங்களும்கயங்களும் வேற்றுமை தெரியா. |
மிக்க வெம் புகைவிழுங்கலின் - மிகுதியான கொடிய புகைஉலகம் எங்கும் கவிழ்ந்து கொண்டமையால்; வெள்ளி அம் கிரியும் வெற்பினோடு ஒக்க - வெள்ளிய அழகிய கைலைமலையும் ஏனைய மலைகளைப் போலக் கருநிறம் பெற்றது; அன்னமும் காக்கையின் உருவ - வெள்ளை அன்னமும் காக்கையின் கருநிறத்ததாயிற்று; பாற்கடல் பக்க வேலையின் படியது - வெண்மையான பாற்கடலும் அருகில் உள்ள கடலின் தன்மையாய் கருங்கடலாயிற்று; முடிவில் திக்கயங்களும் கயங்களும் வேற்றுமை தெரியா - எல்லைக் கோடியில் உள்ள ஐராவதம் முதலிய (வெண்ணிறமான) திசையானைகளுக்கும் ஏனைய கருநிறயானைகளுக்கும் வேறுபாடு தெரியாததாயிற்று. |