பக்கம் எண் :

834சுந்தர காண்டம்

என்னும் கட்டுரை -பிராட்டியைக் கண்டார் இல்லை என்று கூறிய உறுதிச்
சொல்; அகத்து உயிர் உண்டு என ஒறுக்கவும் - தன்னுள் உயிர்
இருக்கின்றது என்னும் நிலையில், தன்னை வருத்தவும்; திண் திறல்
அனுமனை நினையும் சிந்தையான் உளன் -
மிக்க வலிமை வாய்ந்த
அனுமனை எண்ணுகின்ற மனத்தினான இராமபிரான், உயிர் உள்ளவன் என்ற
நிலையில் இருந்தான்.

     தென் திசை தவிரமற்றைய மூன்று திசைகளுக்கும் சென்றவர்கள்
பிராட்டியைக் காணாதவர்களாக வந்தனர் என்ற சொல், வருத்தவும்,
இராமபிரான் உயிர் உளனாயிருந்தது, அனுமன் பிராட்டியைக் கண்டு வருவான்
என்ற நம்பிக்கையால் தான். ‘திண் திறல் அனுமனை நினையும் சிந்தையால்,
உயிர் உளன்’ என்றும் பொருள் கொள்ளலாம்.                    (15)

6022.

ஆரியன்,அருந் துயர்க் கடலுள் ஆழ்பவன்,
‘சீரியது அன்றுநம் செய்கை; தீர்வு அரும்
மூரி வெம்பழியொடும் முடிந்ததாம்’ என,
சூரியன் புதல்வனைநோக்கிச் சொல்லுவான்;

     ஆரியன் அரும்துயர்க் கடலுள் ஆழ்பவன் -
பெருமைக்குரியவனான இராமபிரான், அரிய துன்பமாகிய கடலுள்
மூழ்குபவனாய்; சூரியன் புதல்வனை நோக்கி - சூரியனின் மகனாகிய
சுக்கிரீவனைப் பார்த்து; நம் செய்கை சீரியது அன்று - நாம் மேற்கொண்ட
காரியம் பயன்பட்டதாக அமையவில்லை; தீர்வு அரும் மூரி வெம் பழி
யொடும் முடிந்தது ஆம் என சொல்லுவான் -
தீராத பெரிய பழிச்
சொல்லோடும் முடிந்ததாகும் என்று, பின்வருமாறு எடுத்துக் கூறுபவனானான்.

     நம் செய்கை;இதுவரை பிராட்டியைத் தேட எடுத்துக் கொண்ட முயற்சி.
மூரி வெம்பழி; தன் மனையாளை, தீயோன் ஒருவன் எடுத்துச் செல்ல, இராமன்
அவளை மீட்கும் ஆற்றல் அற்றவனானான் என்று உலகத்தார் கூறுவது. இந்தக்
கவியில் தொகுத்துக் காட்டப்பட்ட செய்கை. பழி ஆகியவைகள் அடுத்த
நான்கு கவிகளில் வகுத்துக் காட்டப்படுகின்றன.                                        (16)

சுக்கிரீவனைநோக்கி இராமபிரான் துயருடன் பேசுதல்

6023.

‘குறித்த நாள் இகந்தன குன்ற, தென் திசை
வெறிக் கருங்குழலியை நாடல் மேயினார்