தன்மை நோக்கி -சமயத்தைப் பெறும் நிலையை எதிர்பார்த்து; யான் இருந்த காலை - நான் இருந்த பொழுது; அலங்கல் வேல் இலங்கை வேந்தன் எய்தினன்- மாலை அணிந்த வேற்படை ஏந்திய இலங்கை மன்னனாகிய இராவணன் அங்கு வந்து; இரந்து கூறி இறைஞ்சினன் - (தன்னை விரும்பும்படி) இரக்கத்தோடு பலவிதமான வார்த்தைகளைச் சொல்லி, பிராட்டியை வணங்கினான்; நங்கை இருந்து வெய்து உரை சொல்ல - பிராட்டி நில்லாது, இருந்து கொண்டே கடுமையான வார்த்தைகளைக் கூற; சீறி கோறல் மேற் கொண்டு விட்டான் - (அதைக் கேட்ட அவன்) கோபித்து, பிராட்டியைக் கொல்லத்தலைப்பட்டுவிட்டான். பிராட்டியின்கற்புத் திண்மையைத் தான் நேரில் காண்பதற்கு நிகழ்ந்த சந்தர்ப்பத்தை, இதன் மூலம் விளக்கினான் அனுமன் என்க. (37) | 6044. | ‘ஆயிடை,அணங்கின் கற்பும், ஐய ! நின் அருளும் செய்ய தூய நல் அறனும்என்று, இங்கு இனையன தொடர்ந்து காப்ப, போயினன்,அரக்கமாரை, “சொல்லுமின் பொதுவின்” என்று, ஆங்கு ஏயினன்; அவர்எலாம் என் மந்திரத்து உறங்கியிற்றார். |
ஐய ! -ஐயனே!; ஆயிடை அணங்கின் கற்பும் - அப்பொழுது பிராட்டியின் கற்புத் திண்மையும்; நின் அருளும் செய்ய தூய நல் அறனும் - உனது அருளின் சிறப்பும் செம்மையும், தூய்மையும் நன்மையும் நிறைந்த அறமும்; என்று இனையன தொடர்ந்து காப்ப - என்று சொல்லத்தக்க இவைகள் எல்லாம் பிராட்டியின் உயிரை விடாமல் பாதுகாக்க; ஆங்கு - அப்பொழுது, (இராவணன்); அரக்கிமாரை - (அருகில் காவல் செய்து கொண்டிருக்கும்) அரக்கியர்களை; பொதுவின் சொல்லுமின் - நன்மை விளைதலும் தீய பயத்தலுமான வார்த்தைகளைப் பொதுப் படக் கூறுங்கள்; என்று ஏயினன் - என்று கட்டளையிட்டு; போயினன் - விட்டுத் தன்னிடத்துக்குச் சென்றான்; அவர் எலாம் என் மந்திரத்து உறங்கியிற்றார் - அந்த அரக்கியரெல்லாம் நான் உச்சரித்த மந்திரத்தின் வலிமையால் தூங்கிவிட்டார்கள். |